Last Updated : 10 May, 2025 12:03 PM

 

Published : 10 May 2025 12:03 PM
Last Updated : 10 May 2025 12:03 PM

‘பாக். ராணுவ, ரேடார் தளங்கள், ஆயுதக் கிடங்குகள் சேதப்படுத்தப்பட்டன’ - கர்னல் சோபியா குரேஷி

புதுடெல்லி: பாகிஸ்தான் ஆயுதப் படைகளுக்கு பதிலளிக்கும் விதமாக அந்நாட்டின் ராணுவ தளங்கள், ரேடார் தளங்கள், ஆயுதக் கிடங்குகளை இந்திய ராணுவம் தாக்கியதாகவும், இதன்மூலம், குறைந்தபட்ச இழப்புகளை உறுதி செய்ததாகவும் கர்னல் சோபியா குரேஷி தெரிவித்துள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு புதுடெல்லியில் இன்று (மே 10) நடைபெற்றது. இதில், வழக்கம்போல் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

விக்ரம் மிஸ்ரியைத் தொடர்ந்து பேசிய கர்னல் சோபியா குரேஷி, “பாகிஸ்தான் ராணுவம் எல்லையோரப் பகுதிகளில் கண்டிக்கத்தக்க மற்றும் தொழில்முறையற்ற தாக்குதல்களை நடத்தியது. ஸ்ரீநகர், அவந்திபூர் மற்றும் உதம்பூர் விமான தளங்களில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் பள்ளி வளாகங்களை பாகிஸ்தான் குறிவைத்தது. இது மீண்டும் ஒருமுறை அவர்களின் பொறுப்பற்ற போக்கை வெளிப்படுத்தியது. பஞ்சாபில் பாகிஸ்தான் அதிவேக ஏவுகணையை ஏவியது

பாகிஸ்தான் வேண்டுமென்றே விமானப்படை தளங்களை குறிவைத்தது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக, இந்திய ஆயுதப்படைகள் விரைவான மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட பதில் நடவடிக்கையை எடுத்து பாகிஸ்தானின் தொழில்நுட்ப நிறுவனங்கள், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், ரேடார் தளங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகளை குறிவைத்தன.

ரஃபிகி, முரித், சக்லாலா, ரஹீம் யார் கான், சுக்கூர் மற்றும் சுனியன் ஆகிய இடங்களில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தளங்கள் வான்வழி ஏவுதல், துல்லிய வெடிமருந்துகள் மற்றும் போர் விமானங்கள் மூலம் குறிவைக்கப்பட்டன. பஸ்ரூரில் உள்ள ரேடார் தளம் மற்றும் சியால்கோட்டில் உள்ள விமான தளமும் துல்லியமான வெடிமருந்துகளால் குறிவைக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகளின் மூலம் ​​இந்தியா குறைந்தபட்ச இணை சேதம் மற்றும் இழப்புகளை உறுதி செய்தது.

மேற்கு பகுதியில், பாகிஸ்தானின் ஆக்ரோஷமான நிலைப்பாடு தொடர்ந்தது. அது இந்திய ராணுவத்தை குறிவைக்க முயன்றது. ஸ்ரீநகரிலிருந்து சாலியா வரை 26 இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. உதம்பூர், ஆதம்பூர், பதான்கோட் மற்றும் பதிண்டாவில் உள்ள விமானப்படை தளங்களில் சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீநகர், அவந்திபூர் மற்றும் உதம்பூரில் உள்ள ராணுவ மருத்துவமனைகளை பாகிஸ்தான் குறிவைத்தது.

பாகிஸ்தான் ராணுவம் எல்லைப் பகுதிகளுக்கு தங்கள் படைகளை நகர்த்துவதை இந்திய ராணுவம் கண்டறிந்தது. மேற்கு முன்னணியில் உள்ள இந்தியாவின் ராணுவ தளங்களைத் தாக்க பாகிஸ்தான் ட்ரோன்கள், நீண்ட தூர ஆயுதங்கள், சுழன்று தாக்கும் வெடிமருந்துகள், ஜெட் விமானங்களைப் பயன்படுத்தியது.” என தெரிவித்தார்.

இந்தியா - பாக். மோதல்: நடப்பது என்ன? - கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். கொடூரமான இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த புதன்கிழமை நள்ளிரவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை அழித்தது இந்திய ராணுவம். அதன் தொடர்ச்சியாக, இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள எல்லை கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய 4 எல்லை மாநிலங்களில் வியாழக்கிழமை இரவு 36 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய 400-க்கும் மேற்பட்ட துருக்கி தயாரிப்பு ட்ரோன்களை ‘சுதர்சன சக்கரம்’ (எஸ்-400) உள்ளிட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களால் இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதன் பின்னரும், பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல்களும், இந்தியாவின் பதிலடி தாக்குதல்களும் நீடிப்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x