Last Updated : 04 May, 2025 02:45 PM

 

Published : 04 May 2025 02:45 PM
Last Updated : 04 May 2025 02:45 PM

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பிரதமர் மோடி - விமானப்படைத் தளபதி சந்திப்பு

கோப்புப்படம்

புதுடெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்திய விமானப்படைத் தளபதி ஏர்மார்ஷல் அமர் பிரீத் சிங், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் இன்று (மே.4) சந்தித்தார். முன்னதாக நேற்று (சனிக்கிழமை) பிரதமர் மோடியை கடற்படையின் தலைமை அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி சந்தித்த நிலையில் இன்று விமானப் படை தளபதியின் சந்திப்பு நடந்துள்ளது.

இந்தச் சந்திப்பானது பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகள் தலைமைத் தளபதி அணில் சவுகான் மற்றும் முப்படைத் தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்துக்கு சில நாட்களுக்கு பின்னர் நடக்கிறது.

முன்னதாக, ஏப்.22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டத்தைத் தொடர்ந்து, ஏப்.23-ம் தேதி பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் நடந்தது. அதில், பயங்கரவாதத்துக்கு பதிலடி கொடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்களும், அதற்கு பின்னால் உள்ள சதிகாரர்களும் கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள் என்று அரசு தெரிவித்தது.

தொடர்ந்து, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் பதிலடிக்கான நேரம், வழிமுறை, இலக்குகளைத் தீர்மானிப்பதற்கான முழு செயல்பாட்டுச் சுதந்திரத்தை அரசு, பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கியது.

பஹல்காம் தாக்குதலுக்கு பின்பு அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தையும் கூட்டியது. அப்போது பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு வழங்குவதாக பல்வேறு கட்சிகளும் உறுதி அளித்தன.

பஹல்காம் கொடூர தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர்-இ-தொய்பா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் உளவு அமைப்பு தேவையான உதவிகளை செய்து கொடுத்து இருப்பதும் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்தநிலையில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம், அட்டாரி எல்லை சோதனைச் சாவடி மூடல், பாகிஸ்தானியர்களுக்கு விசா இடைநிறுத்தம், வர்த்தகம் நிறுத்தம், இறக்குமதி தடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x