Published : 04 May 2025 05:59 AM
Last Updated : 04 May 2025 05:59 AM

பக்தர்கள் மீது பாய்ந்த மின்சாரம்: கோவா கோயில் கூட்ட நெரிசலில் 7 பேர் பலி - நடந்தது என்ன?

கோவா மாநில கோயிலில் நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பக்தர்கள் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 22 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கோவா மாநிலத்தின் ஷிர்காவ் பகுதியில் புகழ்பெற்ற ஸ்ரீ தேவி லைராயி கோயில் அமைந்துள்ளது. இது, கோவா தலைநகர் பனாஜியில் இருந்து 40 கி.மீ. தொலைவில் இருக்கிறது. ஆண்டுதோறும் மே மாதத்தில் ஸ்ரீ தேவி லைராயி கோயிலில் பூக்குழி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் பங்கேற்க கோவா மட்டுமன்றி, மகாராஷ்டிரா, கர்நாடகாவை சேர்ந்த பக்தர்கள் விரதமிருந்து புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.

இந்த ஆண்டு பூக்குழி திருவிழா கடந்த 2-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீதேவி லைராயி கோயிலில் குவிந்து பூக்குழி இறங்கினர். மலைக்குன்றின் மீது கோயில் அமைந்திருக்கிறது. குறுகிய மலைப் பாதை வழியாக பக்தர்கள் கோயிலுக்கு சென்றனர். அதேநேரம் தேவியை வழிபட்ட பக்தர்கள் மலைப் பாதை வழியாக கீழே இறங்கினர். கோயில் வளாகம் மற்றும் மலை பாதையில் சுமார் 70,000-க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

திருவிழாவை ஒட்டி மலை பாதையின் இருபுறமும் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கடந்த சனிக்கிழமை அதிகாலை ஒரு கடையில் அமைக்கப்பட்டிருந்த மின் சாதனங்களில் இருந்து பக்தர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் நிலைதடுமாறிய பக்தர்கள் அடுத்தடுத்து சரிந்து கீழே விழுந்தனர்.

இதன்காரணமாக கோயிலுக்கு செல்லும் பாதையில் மிகப்பெரிய கூட்டநெரிசல் ஏற்பட்டது. நாலாபுறமும் பக்தர்கள் சிதறி ஓடினர். இதில் பலர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் விரைந்து வந்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தினர்.

இந்த விபத்தில் 7 பக்தர்கள் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். லேசான காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர். 22 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் தலைநகர் பனாஜியில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் நேற்று வடக்கு கோவா மருத்துவமனை, பிக்கோலிம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள பக்தர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். விபத்து குறித்து உயர்நிலை விசாரணை நடத்த காவல் துறைக்கு அவர் உத்தரவிட்டார்.

அவர் கூறும்போது, “லைராயி கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்கள், காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு வழங்கும். பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் என்னிடம் விவரங்களைக் கேட்டறிந்தார். கோவா அரசு சார்பில் 3 நாட்கள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “கோவா கோயில் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட விபத்து வேதனையளிக்கிறது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “கோவாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்து மிகுந்த வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை உள்ளூர் நிர்வாகம் வழங்கி வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

கோவா போலீஸார் கூறியதாவது: லைராயி கோயில் பூக்குழி திருவிழாவுக்காக 1,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். பக்தர்கள் மீது மின்சாரம் பாய்ந்து கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மலைப் பகுதி சகதியில் பக்தர்கள் அடுத்தடுத்து வழுக்கி விழுந்து கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல்வர் பிரமோத் சாவந்த் உத்தரவின்படி உயர்நிலை விசாரணை நடத்தி வருகிறோம். இதில் கூட்டநெரிசல் விபத்துக்கான உண்மையான காரணம் என்ன என்பது தெரியவரும். இவ்வாறு கோவா போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x