ம.பி.யில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி 26 நாட்களில் ரூ.2.5 கோடி இழந்த துறவி

ம.பி.யில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி 26 நாட்களில் ரூ.2.5 கோடி இழந்த துறவி
Updated on
1 min read

போபால்: மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் அமைந்துள்ளது ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமம். இதன் செயலாளராக இருப்பவர் சுவாமி சுப்ரதீப்தானந்தா. இவருக்கு கடந்த மார்ச் 17-ம் தேதி ஒரு வீடியோ கால் வந்துள்ளது. மறுமுனையில் பேசியவர் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்த காவல் துறை அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

அப்போது அவர், தொழிலதிபர் நரேஷ் கோயல் தொடர்பான வழக்கில் சுவாமி சுப்ரதீப்தானந்தா பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி அவர் மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். இதைக் கேட்டு பயந்துபோன சுவாமியிடம், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் அல்லது கடும் சட்ட நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்று அந்த காவல் துறை அதிகாரி சுவாமியை மிரட்டியுள்ளார்.

மேலும், டிஜிட்டல் அரெஸ்டை பயன்படுத்தி அவரிடமிருந்து 26 நாட்களில் 12 வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு ரூ.2.52 கோடியை அனுப்பும்படி கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார். சரிபார்ப்பு நடைமுறை முடிவடைந்ததும் ஏப்ரல் 15-ம் தேதி கொடுத்த பணம் முழுவதும் திருப்பித் தரப்படும் என்று அந்த மோசடி அதிகாரி சுவாமியிடம் உறுதியளித்துள்ளார்.

அவர் தெரிவித்தபடி கொடுத்த பணத்தை திருப்பித்தராததால் குவாலியர் காவல் துறை கண்காணிப்பாளர் தரம்வீர் சிங்கிடம் சுவாமி புகார் அளித்ததையடுத்து சைபர் குற்ற புலானாய்வு போலீஸார் தங்களது விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். இந்த மோசடியின் பின்னால் சர்வதேச கும்பலின் கைவரிசை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in