Published : 05 Mar 2025 04:52 AM
Last Updated : 05 Mar 2025 04:52 AM
மகா கும்பமேளாவில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவம் ஒன்றுகூட நிகழவில்லை என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26 வரை வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதுகுறித்து உ.பி. சட்டப்பேரவையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று பேசியதாவது: பிரயாக்ராஜில் 45 நாட்கள் நடைபெற்ற மகா கும்பமேளாவுக்கு நாடு மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து 66 கோடிக்கும் மேற்பட்டோர் வருகை தந்ததனர். இவர்களில் பாதி பேர் பெண் பக்தர்களாக இருந்திருக்க வேண்டும். என்றாலும் பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல், கொள்ளை, கடத்தல் அல்லது கொலை என ஒரு குற்ற சம்பவம் கூட நிகழவில்லை.
எதிர்பார்த்ததை விட அதிக மக்கள் மகா கும்பமேளாவுக்கு வருகை தந்தனர். இவர்கள் புனித நீராடிவிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றனர். கும்பமேளா ஏற்பாடுகளுக்கு சர்வதேச ஊடகங்களும் பாராட்டு தெரிவித்துள்ளன.
ராம் மனோகர் லோகியாவை தங்கள் தலைவராக சமாஜ்வாதி கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் அவரது கொள்கையில் இருந்து விலகிச் சென்றுவிட்டது. இந்தியாவின் ஒற்றுமைக்கு விஷ்ணு, சிவன் மற்றும் ராமர் அடிப்படையாக உள்ளனர், ஆனால் சமாஜ்வாதி கட்சி இதில் நம்பிக்கை கொள்ளவில்லை.
நாங்கள் அனைவரின் வளர்ச்சி பற்றி பேசுகிறோம். இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் வளர்ச்சியின் தனித்துவமான முத்திரை மகா கும்பத்தில் காணப்பட்டது. சாதி, மதம் அல்லது பிராந்தியத்தின் அடிப்படையில் எந்த வகையான பாகுபாடும் கும்ப மேளாவில் காண முடியவில்லை. இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT