2025-26ம் நிதியாண்டில் 10,000 கி.மீ தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும்

2025-26ம் நிதியாண்டில் 10,000 கி.மீ தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும்
Updated on
1 min read

புதுடெல்லி: மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் 2025-26-ம் நிதியாண்டில் 10,000 கி.மீ தூரத்துக்கு சாலை அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இது கடந்த 7 ஆண்டுகளில் மிகக் குறைந்த இலக்கு ஆகும்.

மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் விரிவான பட்ஜெட் ஆவணம் கடந்த திங்கள் கிழமை வெளியானது. அதில் 2025-26-ம் நிதியாண்டில் 10,000 கி.மீ தூரத்துக்கு நெடுஞ்சாலை அமைக்க திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-19-ம் நிதியாண்டில் இருந்து அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளின் இலக்கு தூரங்களை ஒப்பிட்டு பார்த்தால், இந்தாண்டு இலக்கு மிகக் குறைவு.

கடந்த 2019-20-ம் நிதியாண்டில் 10,237 கி.மீ தூரத்துக்கு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. 2020-21-ம் ஆண்டில் கரோனா பாதிப்பு ஏற்பட்ட போதிலும் 13,327 கி.மீ தூரத்துக்கு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. கடந்த நிதியாண்டில் 12,349 கி.மீ தூரத்துக்கு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. இந்தாண்டு மார்ச் மாதத்துக்குள் 10,500 கி.மீ தூரம் நெடுஞ்சாலை அமைக்கும் இலக்கு எட்டப்படவுள்ளது. கடந்த பிப்ரவரி 15-ம் தேதிக்குள் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் 8,000 கி.மீ தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்துள்ளன.

2025-26-ம் நிதியாண்டின் இலக்கு தூரம் பிறகு மாற்றப்படலாம் எனவும் கூறப்படுகிறது. நிறைவடைந்த நெடுஞ்சாலை திட்டங்கள் மூலம் ரூ.30,000 கோடி திரட்டவும், தனியார் முதலீடு மூலம் ரூ.35,000 கோடி திரட்டவும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சாலை விபத்துகளில் காயம் அடைபவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் திட்டத்துக்கு ரூ.128 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டம் அசாம், சண்டிகர், பஞ்சாப், உத்தராகண்ட், ஹரியானா மற்றும் புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படும் 1,000 இடங்களை அகற்றவும், 40,000 கி.மீ தூரத்துக்கு சாலை பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in