முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழக, கேரள அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழக, கேரள அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணையைக் கண்காணிக்க எந்தக் குழு 'மிகவும் பயனுள்ளதாக' இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு அரசும், கேரளா அரசும் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் கேட்டுக் கொண்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள கேரள அரசு முட்டுக்கட்டையாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை இன்று (ஜன. 20) விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், முல்லைப் பெரியாறு அணையைப் பராமரிப்பதில் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழு மிகவும் பயனுள்ளதாக இருக்குமா அல்லது 2021-ஆம் ஆண்டின் புதிய அணை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்ட ஒரு சட்டப்பூர்வக் குழுவிடம் அந்தப் பணியை வழங்க வேண்டுமா என்பது குறித்து தமிழ்நாடு அரசும், கேரள அரசும் பதிலளிக்க வாய்மொழியாக உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளதை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், அதற்கு கேரளா கட்டுப்பட வேண்டும் என்றும் தெரிவித்தது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டிருந்தால் எந்தத் தீர்வும் எட்ட முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை பிப்ரவரி 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in