Published : 16 Jan 2025 02:57 AM
Last Updated : 16 Jan 2025 02:57 AM
புதுடெல்லி: பிரதமர் மோடியின் மக்களவை தொகுதியான வாராணசியில் காசி தமிழ்ச் சங்கமம் 1 மற்றும் 2 நிகழ்ச்சிகள் கடந்த 2022, 2023-ம் ஆண்டுகளில் சிறப்பாக நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக 3-வது ஆண்டு காசி தமிழ்ச் சங்கமம் 3.0, பிப்ரவரி 15 முதல் 24 வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
இதுகுறித்த செய்தி முன்கூட்டியே ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் ஜனவரி 8-ல் வெளியானது. இந்நிலையில், மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன் மூலக்கருத்தாக “அகத்திய முனி” இடம்பெறுவார் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது: பிரதமர் மோடி இந்திய மாநிலங்களின் கலாச்சாரங்களை இணைக்கும் பணியை செய்து வருகிறார். இந்த வகையில், காசியுடன் தமிழ்நாட்டுக்கு இருக்கும் பாரம்பரியக் கலாச்சாரத் தொடர்பை மீண்டும் கொண்டு வர காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கினார். இந்நிகழ்ச்சிக்கு வருபவர்கள் அயோத்தி ராமர் கோயில், பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்ப மேளாவை காணலாம்.
இந்த முறை காசி தமிழ்ச் சங்கமம் 3.0-ன் மூலக்கருத்தாக தமிழ் இலக்கியத்தை முதன்முறையாக எழுதிய மகரிஷி அகத்திய முனி என்று வைக்கப்பட்டுள்ளது. காசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையில் சிறந்த இணைப்பாக அகத்தியர் இருந்தார். காசியில் அகத்தியர் குண்டம் மற்றும் அகத்திய மகாதேவ் கோயில் அமைந்துள்ளது. இமாலயத்தில் பிறந்த அகத்தியரிடம் சிவன், தமிழகத்துக்கு செல்லும்படி கட்டளையிட்டதாக நம்பிக்கை உள்ளது. அகத்தியரிடம்தான் முருகன் தமிழ் இலக்கணம் கற்றுக் கொண்டதாக இதிகாசங்கள் குறிப்பிடுகின்றன.
இந்திய சித்த வைத்திய முறையை தோற்றுவித்த அகத்தியரின் பிறந்த டிசம்பர் 19-ம் தேதி “தேசிய சித்த நாள்” என்று கொண்டாடப்படுகிறது. தவிர தமிழ்நாடு மற்றும் கேரளாவின் களரி கலையை தோற்றுவித்தவர், சோழ, பாண்டியர்களின் குல குருவாக இருந்தவர் என்று அகத்தியர் போற்றப்படுகிறார். தமிழ் மற்றும் சம்ஸ்கிருத மொழிகளில் அகத்தியர் பல நூல்களை எழுதியுள்ளார். ரிக் வேதத்தில் சுமார் 300 மந்திரங்களையும் எழுதியுள்ளார். ராமருக்கு அதித்ய ரிதத்தை (போர் நுட்பம்) அகத்தியர் போதித்ததாக கூறப்படுகிறது.
அகத்தியர் தம் மனைவி லும்ப முத்ராவுடன் நாட்டின் ஆயிரக்கணக்காகக் கோயில்களில், குறிப்பாக தமிழ்நாட்டின் காவிரிக்கரையிலும் வழிபாடு செய்ததற்கான தகவல்கள் உள்ளன. அகத்தியர் வழிபாடு இந்தோனேசியா, ஜாவா, கம்போடியா மற்றும் வியட்நாமில் இன்றும் வழக்கத்தில் உள்ளன. அந்த அளவுக்கு புகழ்பெற்ற அகத்திய முனி இந்த முறை தமிழ்ச் சங்கமம் 3.0 நிகழ்ச்சியின் மூல ஆதாரமாக இருக்கிறார்.
கடந்த முறையை போலவே, வாராணசியின் கங்கை கரைகளில் ஒன்றான நமோ காட்டில் இந்நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்நிகழ்ச்சி மூலம் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ எனும் கொள்கை மீண்டும் பரப்பப்படும். இவ்வாறு அமைச்சர் தர்மேந் திர பிரதான் தெரிவித்தார். இந்நிகழ்ச்சிக்கான வருகை பதிவுகளை தேர்வு செய்ய நேற்று சென்னை ஐஐடியின் இணைய தளம் (kasitamil.iit.m.ac.in) தொடங்கப்பட்டுள்ளது. இதில், 1,200 பேருடன் ஐஐடி, என்ஐடி மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்களின் 200 மாணவர்களும் கலந்து கொள்கின்றனர். இந்த 200 பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் தமிழகத்தில் இருந்து பிப்ரவரி 13-ல் புறப்பட்டு 26-ம் தேதி திரும்புகிறார்கள். காசி தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சியை இந்த ஆண்டும் பிரதமர் மோடி தொடங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்கும் தமிழக அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவ்வாறு அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT