‘புது யுக அடிமைத்தனம்...’ - எல் அண்ட் டி தலைவரின் 90 மணி நேர வேலை கருத்துக்கு சிவசேனா கண்டனம்

‘புது யுக அடிமைத்தனம்...’ - எல் அண்ட் டி தலைவரின் 90 மணி நேர வேலை கருத்துக்கு சிவசேனா கண்டனம்
Updated on
1 min read

மும்பை: ஊழியர்கள் வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என எல் அண்ட் டி நிறுவன தலைவர் எஸ்.என்.சுப்ரமண்யத்தின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சிவ சேனா கட்சி (உத்தவ் அணி) எம்.பி., பிரியங்கா சதூர்வேதி, "இது நவீன யுக அடிமைத்தனத்தை அரங்கேற்றும் முயற்சி" என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரியங்கா சதுர்வேதி வெளியிட்டுள்ள பதிவில், "பெண் வெறுப்போடு இருப்பதோடு மட்டும் இல்லாமல், இந்தக் கூற்று இந்தியாவின் புதிய யுக அடிமைத் தனத்தை அரங்கேற்ற விரும்புவதையே குறிக்கிறது" என்று தெரிவித்துள்ளார். அத்துடன் எஸ்.என்.சுப்ரமண்யத்தின் 90 மணி நேர வேலை குறித்த செய்தியையும் சுட்டிக்காட்டும் படத்தினையும் பகிரந்துள்ளார்.

எல் அண்ட் டி தலைவர் கூறியது என்ன?: ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை உட்பட வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என எஸ்.என்.சுப்ரமண்யம் தெரிவித்திருந்தார். அவர், “ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களை வேலை செய்ய வைக்க முடியவில்லை என்பதை எண்ணி நான் வருந்துகிறேன். அப்படி என்னால் அதை செய்ய முடிந்தால் நிச்சயம் நான் மகிழ்ச்சி அடைவேன்.

ஏனென்றால் நான் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்கிறேன். உலகில் முதல் நிலையில் இருக்க வேண்டுமென்றால் வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டில் இருந்து என்ன செய்யப் போகிறீர்கள்? எவ்வளவு நேரம்தான் மனைவியின் முகத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பீர்கள். எவ்வளவு நேரம் தான் மனைவியும் கணவனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க முடியும். வாருங்கள் அலுவலகத்துக்கு வந்து வேலை பாருங்கள்” என ஊழியர்கள் மத்தியில் பேசிய போது எஸ்.என்.சுப்ரமண்யம் தெரிவித்தார். தங்கள் நிறுவன தலைவர் சொல்லிய கருத்து இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்கும் லட்சியத்தை பிரதிபலிப்பதாக எல் அண்ட் டி தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in