ஜெய்ப்பூர் சமையல் எரிவாயு டேங்கர் லாரி விபத்து பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் டேங்கர் லாரி விபத்துக்குள்ளாகி, சமையல் காஸ் வெளியேறியதில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இதனை ஜெய்ப்பூர் மேற்கு டிசிபி அமித் குமார் இன்று (சனிக்கிழமை) உறுதி செய்துள்ளார்.
ராஜஸ்தானின் அஜ்மீரில் இருந்து தலைநகர் ஜெய்ப்பூருக்கு சமையல் காஸ் டேங்கர் லாரி ஒன்று வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது. இந்த லாரியில் 22 டன் சமையல் காஸ் நிரப்பப்பட்டு இருந்தது. அதிகாலை 5.30 மணி அளவில் ஜெய்ப்பூரின் பாங்க்ரோட்டோ பகுதி டிபிஎஸ் பள்ளி அருகே உள்ள வளைவில் சென்றபோது, எதிரே வந்த சரக்கு லாரியுடன் பயங்கர வேகத்தில் மோதியது.
இதில் டேங்கர் மூடி திறந்து கொண்டதில், சுமார் ஒரு கி.மீ. தூரத்துக்கு காஸ் பரவியது. லாரியை சுற்றி சுமார் 200 மீட்டர் தூரம் வரை அடர்ந்த பனிமூட்டம் போல காஸ் சூழ்ந்தது.
இந்த நிலையில், டேங்கர் லாரி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. சாலையில் அதன் அருகே நின்றிருந்த 40-க்கும் மேற்பட்ட வாகனங்களும் அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்தன. இந்த பயங்கர விபத்தில், பேருந்து பயணிகள், அருகே இருந்த வாகனங்களின் ஓட்டுநர்கள் உட்பட 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். பலத்த தீக்காயம் அடைந்த 35 பேர், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும், ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்வர் பஜன்லால் சர்மா அறிவித்தார்.
இதனிடையே, இந்தவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதாக டிசிபி குமார் இன்று தெரிவித்தார். இதே விஷயத்தை எஸ்எம்எஸ் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் சுஷில் குமார் பாடி உறுதி செய்துள்ளார். அவர் கூறுகையில், ‘தீ விபத்து காரணமாக இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் 26 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது அவர்கள் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளனர்.” என்றார்.
