வங்கதேச இந்துக்களுக்காக இந்தியா குரல் எழுப்ப முடியவில்லை: பிரியங்கா காந்தி

வங்கதேச இந்துக்களுக்காக இந்தியா குரல் எழுப்ப முடியவில்லை: பிரியங்கா காந்தி
Updated on
1 min read

புதுடெல்லி: வங்கதேசத்தில் இந்துக்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலுக்கு எதிராக இந்திய அரசால் குரல் எழுப்ப முடியவில்லை என்று காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வத்ரா குற்றம் சாட்டினார்.

மக்களவையில் பேசிய ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி நிஷிங்கந்த் துபே, "வங்கதேசம் இந்த தினத்தில்தான் தனது சுதந்திரத்தைப் பெற்றது. இதற்காக நடந்த போரில் இந்திய ராணுவம், பல ஆயிரம் பாகிஸ்தான் ராணுவத்தினரை சிறைபிடித்தது. அப்போதைய கிழக்குப் பாகிஸ்தானில், பாகிஸ்தானால் ஜனநாயகம் அழிக்கப்பட்டபோது இந்தியா அதனை மீட்டெடுத்தது" என்று தெரிவித்தார். இதையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியை குற்றம் சாட்டிப் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அவருக்கு எதிராக அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்துப் பேசிய பிரியங்கா காந்தி வத்ரா, “வெற்றி தின விழாவை இன்று நாடு கொண்டாடுகிறது. இந்த வெற்றி விழாவிற்கு இந்தியாவை வழிநடத்திய வீரர்களுக்கு எனது மரியாதையை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய மக்களின் ஆதரவு இல்லாமல் இந்த வெற்றி கிடைக்கவில்லை. இந்தியா தனித்து போர் புரிந்தபோது நாட்டு மக்கள் அதற்கு ஆதரவாக நின்றார்கள். அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு நான் எனது மரியாதையை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்று நடந்தது ஜனநாயகத்துக்கான போராட்டம். தற்போது இந்துக்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் போது, ​​இந்திய அரசால் அதற்கு எதிராகக் குரல் எழுப்பவோ, வங்கதேச அரசிடம் பேசவோ முடியவில்லை.” என குற்றம் சாட்டினார். பிரியங்காவின் இந்த குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் பிரியங்காவின் பேச்சுக்கு குறுக்கீடு செய்வதாக எதிர்க்கட்சி எம்பிக்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்துப் பேசிய பிரியங்கா காந்தி வத்ரா, “வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரான இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடக்கும் விஷயங்களுக்கு எதிராக இந்திய அரசு குரல் எழுப்ப வேண்டும். நமது அரசு வங்கதேச அரசுடன் பேசி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும்.” என வலியுறுத்தினார்.

இதனிடையே, மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, “இன்று வங்கதேச விடுதலை நாள். மறைந்த பிரதமர் இந்திரா காந்தி நம் நாட்டைக் காப்பாற்றினார். அவர் இரும்புப் பெண்மணியாக இருந்தார். ஒருவேளை அங்குள்ள சிறுபான்மையினருக்கு உதவ பாஜக தலைவர்களை அவர் தூண்டியிருக்கலாம்” என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in