‘‘நூற்றாண்டுக்கு ஒருமுறை கிடைக்கக்கூடிய ஆளுமை சுப்ரமணிய பாரதி’’ - பிரதமர் மோடி புகழாரம்

‘‘நூற்றாண்டுக்கு ஒருமுறை கிடைக்கக்கூடிய ஆளுமை சுப்ரமணிய பாரதி’’ - பிரதமர் மோடி புகழாரம்
Updated on
1 min read

புதுடெல்லி: மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 143-வது பிறந்தநாள் விழா இன்று (டிசம்பர் 11) நாடு முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாரதியின் முழுமையானப் படைப்பு நூல்களின் தொகுப்பை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று வெளியிட்டார்.

மத்திய கலாச்சாரத் துறையின் கீழான சாகித்ய அகாடமி சார்பில் பிரதமரின் அரசு இல்லத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. கால வரிசையில் பாரதி படைப்புகள் என்ற பெயரில் தமிழில் வெளியிடப்பட்ட இந்நூல்களை சீனி விஸ்வநாதன் தொகுத்துள்ளார். இவ்விழாவில் கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவாத், நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் டாக்டர்.எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த தொகுப்பில் சுப்பிரமணிய பாரதியின் எழுத்துக்களின் பதிப்புகள், விளக்கங்கள், ஆவணங்கள், பின்னணி தகவல்கள் மற்றும் தத்துவ விளக்கக் காட்சி போன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளன. முதன்முறையாக பாரதியாரின் இந்த தொகுதிகள் நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தின் 123 ஆண்டுகள் பழமையான அலையன்ஸ் நிறுவனம் இதனை வெளியிட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "மாபெரும் கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளை நாடு இன்று கொண்டாடுகிறது. நான் அவரை பயபக்தியுடன் வணங்குகிறேன், அவரது மரபுக்கு எனது இதயப்பூர்வமான அஞ்சலியை செலுத்துகிறேன்.

மகாகவி சுப்ரமணிய பாரதியின் படைப்புகள் வெளிவருவது என்பது அவருக்கு குறிப்பிடத்தக்க மரியாதையை அளிப்பதாகும். நாட்டின் தேவைகளை மனதில் கொண்டு பாடுபட்ட சிறந்த சிந்தனையாளர் சுப்ரமணிய பாரதி. அவருடைய பார்வை மிகவும் விசாலமானது. அந்த காலகட்டத்தில் நாட்டிற்கு தேவையான அனைத்து திசைகளிலும் அவர் பணியாற்றினார்.

பாரதியார் தமிழ்நாட்டின், தமிழ் மொழியின் பாரம்பரியம் மட்டுமல்ல, அவர் தனது ஒவ்வொரு மூச்சையும் அன்னை பாரதத்தின் சேவைக்காக அர்ப்பணித்த சிந்தனையாளர். நம் நாட்டில், வார்த்தைகள் வெறும் வெளிப்பாடாக மட்டும் இல்லாமல், ஆழமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. வார்த்தைகளின் எல்லையற்ற ஆற்றலைப் பொக்கிஷமாகக் கருதும் கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்கள் நாம். அதனால்தான் நம் ஞானிகளின் வார்த்தைகள் அவர்களின் எண்ணங்கள் மட்டுமல்ல, அவர்களின் சிந்தனை, அனுபவம் மற்றும் ஆன்மீக பயிற்சியின் சாறாகும்.

சுப்ரமணிய பாரதி போன்ற ஆளுமை நூற்றாண்டுக்கு ஒருமுறை கிடைக்கக்கூடியது. அவருடைய சிந்தனை, புத்திசாலித்தனம், பல பரிமாண ஆளுமை ஆகியவை எல்லோரையும் ஆச்சரியப்படுத்துகிறது.” என குறிப்பிட்டார்.

உத்தரப் பிரதேசம் வாராணசியின் காசி தமிழ் சங்கமம் கடந்த 2022-ல் முதன்முறையாக நடந்தது. அப்போது, பாரதியின் பிறந்தநாளை மத்திய கல்வித் துறை அமைச்சகம் இனி வருடந்தோறும் ‘தேசிய மொழிகள் தினம்’ ஆக கொண்டாடப்படும் என்று அறிவித்தது. இதன் காரணமாக, நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இவ்வாண்டு பாரதியாரின் பிறந்தநாள் இரண்டாவது முறையாக கொண்டாடப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in