

புதுடெல்லி: உ.பி.யில் 2027 சட்டப்பேரவை தேர்தலுக்கான அரை இறுதிப் போட்டியாக 9 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கருதப்பட்டது. ஆனால் சமாஜ்வாதி வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த இரு தொகுதிகளில் கர்ஹாலில், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் எம்எல்ஏவாக இருந்தார். இங்கு சமாஜ்வாதி சார்பில் லாலு யாதவின் மருமகனும், பாஜக சார்பில் முலாயம் சிங்கின் மருமகனும் போட்டியிட்டனர். இறுதியில் சமாஜ்வாதியின் தேஜ் பிரதாப் யாதவ் வெற்றி பெற்றார்.
மற்றொரு தொகுதியான சிசாமுவில் சமாஜ்வாதி வேட்பாளர் நசீம் சோலங்கி வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் முஸ்லிம்கள் அதிகம் என்பதால் சமாஜ்வாதி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. சமாஜ்வாதியின் தோல்விக்கான பின்னணியில் அக்கட்சிக்கு தலித் வாக்குகள் கிடைக்கவில்லை எனக் கருதப்படுகிறது.
இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாததால் ராகுல், பிரியங்கா பிரச்சாரம் செய்யவில்லை. மேலும் பாஜகவுக்கு எதிராக அரசியலமைப்பு சட்டம் குறித்து பிரச்சாரத்தில் பேசாதது போன்ற காரணங்கள் சமாஜ்வாதியின் தோல்விக்கு காரணமாகி விட்டன.