தவறான சமிக்ஞை அளித்ததால் இன்ஜின் இடையே சிக்கி ரயில்வே ஊழியர் பரிதாப பலி

தவறான சமிக்ஞை அளித்ததால் இன்ஜின் இடையே சிக்கி ரயில்வே ஊழியர் பரிதாப பலி
Updated on
1 min read

புதுடெல்லி: பிஹார் மாநிலம் பரவுனி ஜங்ஷனை நவம்பர் 9-ம் தேதி காலை 8.10 மணிக்கு லக்னோ-பரவுனி ரயில் வந்தடைந்தது. அப்போது, பாயிண்ட்மேன் முகமது சுலைமான் மற்றும் அமர் குமார் ராவ் இன்ஜினை தனியாக பிரிப்பதற்காக சென்றுள்ளனர்.

இந்த பணியின்போது, ரயில் ஓட்டுநருக்கு தவறான சமிக்ஞை வழங்கப்பட்டதால் இன்ஜினுக்கும் பவர் காருக்கும் இடையில் நசுங்கி அமர் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்து பதற்றமடைந்த ரயில் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து, இரண்டு மணி நேரத்துக்குப் பிறகே இன்ஜின் மற்றும் பவர் கார் தனியாக பிரிக்கப்பட்டு அமர் குமாரின் உடல் வெளியே எடுக்கப்பட்டது.

இதையடுத்து, அமர் குடும்பத்தினர் இந்த விபத்துக்கு காரணமான பாயிண்ட்மேன் சுலைமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதையடுத்து 5 பேர் அடங்கிய ரயில்வே அதிகாரிகள் குழு நடத்திய விசாரணையில் இரண்டு பாயிண்ட்மேன்களுக்கு இடையே மிக மோசமான ஒருங்கிணைப்பின் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்ததை கண்டறிந்தனர். சிசிடிவி ஆதாரங்களை ஆராய்ந்ததில், பாயிண்ட்மேன் முகமது சுலைமான் லோகோ பைலட்டுக்கு தவறான சமிக்ஞை அளித்ததே அமர் குமாரின் மரணத்துக்கு காரணம் என்பது தெரியவந்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டை சுலைமான் மறுத்ததுடன் ரயில் ஓட்டுநர்தான் இந்த விபத்துக்கு முழு பொறுப்பு என எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இந்த விபத்து தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in