சிறுபான்மை அந்தஸ்தை புதிய அமர்வு முடிவு செய்யும்: அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் மீதான வழக்கில் தீர்ப்பு

சிறுபான்மை அந்தஸ்தை புதிய அமர்வு முடிவு செய்யும்: அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் மீதான வழக்கில் தீர்ப்பு

Published on

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் (ஏஎம்யு) மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் 18 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன்படி இந்தப் பல்கலை.க்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்குவது குறித்து 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு முடிவு செய்யும்.

டெல்லிக்கு அருகில் உ.பி.யின் அலிகர் நகரில் ஏஎம்யு உள்ளது. கடந்த 1951-ல் மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்பட்டு, சிறுபான்மையினருக்கான ஒதுக்கீடு பெற்று வந்தது இதன் மீது சில விளக்கங்கள் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் 1967-ல் தொடுக்கப்பட்ட வழக்கை 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. இதில், மத்திய அரசின் சட்டம் இயற்றி ஏஎம்யு-வுக்கு சிறுபான்மை அந்தஸ்து அளிக்க முடியாது எனவும் அதில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சம உரிமை இருப்பதாகவும் தீர்ப்பு அளித்தது.

இதையடுத்து முஸ்லிம்களின் கோரிக்கையை ஏற்று 1981-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, ஏஎம்யு-வை மத்திய அரசு நிறுவனமாக அங்கீகரித்து சிறுபான்மை அந்தஸ்தும் அளித்தார். இதற்காக நாடாளுமன்றத்தில் சட்டமும் நிறைவேற்றினார். அப்போது முதல் முஸ்லிம்களுக்கான ஒதுக்கீடு மீண்டும் தொடர்ந்தது.

இந்நிலையில் மாணவர்கள் சிலர் தொடர்ந்த வழக்கில் ஏஎம்யு-வின் சிறுபான்மை அந்தஸ்தை அலாகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2006-ல் ரத்து செய்தது. இதனை உயர் நீதிமன்ற அமர்வும் உறுதி செய்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு 7 நீதிபதிகள் அமர்வின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. அப்போது முதல் நடைபெற்ற விசாரணையின் தீர்ப்பு நேற்று வெளியாகி உள்ளது. இதில் தலைமை நீதிபதி உட்பட 4 நீதிபதிகள் ஒரு கருத்தையும் 3 நீதிபதிகள் மாற்று கருத்தையும் தெரிவித்தனர். பெரும்பான்மை அடிப்படையில் இத்தீர்ப்பில், அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவும் 1967-ல் 3 நீதிபதிகள் அளித்த உத்தரவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த தீர்ப்பில், "ஒரு கல்வி நிறுவனத்தின் அம்சங்களை கருதி அதற்கு சிறுபான்மை அந்தஸ்து அளிக்கும் உரிமை மத்திய அரசுக்கு உள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 30-ன் கீழ் ஒரு கல்வி நிறுவனத்திற்கு சிறுபான்மை அந்தஸ்து அளிக்க முடியும். அதற்கான அதிகாரம் அரசுக்கு உள்ளது. ஆனால் அதற்காக விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம். ஏஎம்யு-வுக்கு சிறுபான்மை அந்தஸ்து அளிப்பதற்கான அம்சங்கள் மீது மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து முடிவு செய்யலாம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இத்துடன், சிறுபான்மை அந்தஸ்து பெற ஒரு கல்வி நிறுவனத்திற்கு தேவையான அம்சங்களை நீதிபதிகள் பட்டியலிட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பணியிருந்து ஓய்வுபெறும் நாளான நேற்று இத்தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதனால் 3 நீதிபதிகள் அமர்வை புதிய தலைமை நீதிபதி அறிவிப்பார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஷாதான் ஃபராஸத் கூறும்போது, “இன்று வெளியான தீர்ப்பின் மூலம், 1967-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பை அதன் 7 நீதிபதிகள் அமர்வு ரத்து செய்துள்ளது. இதனால் 1981-ல் அலிகர் பல்கலைக்கு மீண்டும் அளிக்கப்பட்ட சிறுபான்மை அந்தஸ்தும் அமலாகாது. இனி, சிறுபான்மை அந்தஸ்துக்காக ஏழு நீதிபதிகள் அமர்வு பட்டியலிட்டவற்றை ஏஎம்யு பின்பற்றியுள்ளதா என 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு விசாரித்து அதற்கான சிறுபான்மை அந்தஸ்து குறித்து முடிவு செய்யும்" என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in