சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட விவகாரம் - ஜம்மு காஷ்மீர் பேரவையில் கைகலப்பு

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட விவகாரம் - ஜம்மு காஷ்மீர் பேரவையில் கைகலப்பு

Published on

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்குள் லாங்கேட் எம்எல்ஏ குர்ஷித் அகமது சேக், சட்டப்பிரிவு 370-ஐ திரும்பக் கொண்டு வர வேண்டும் என்று பதாகை காட்டியதால் வியாழக்கிழமை பேரவையில் பரபரப்பும் கைகலப்பும் ஏற்பட்டது. குர்ஷித் பாராமுல்லா மக்களவை உறுப்பினரும், சிறையில் இருக்கும் பொறியாளர் ரஷித்தின் தம்பியுமாவார்.

அவாமி இட்டேஹக் கட்சியைச் சேர்ந்த குர்ஷித் காட்டிய பதாகையில்,‘சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏவை மீட்டெடுக்க வேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்’ என்று எழுதப்பட்டிருந்தது. சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக எம்எல்ஏவுமான சுனில் சர்மா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அதனைப் பொருட்படுத்தாத குர்ஷித் பேரவையின் மையப்பகுதிக்குள் வந்தார்.

சபாநாயகரும் குர்ஷித்தை அவரது இருக்கையில் சென்று அமர அறிவுறுத்தினார். என்றாலும் தொடர்ந்து அவர் அவையின் மையத்தில் பதாகையுடன் நின்றார். இதனால் சில பாஜகவினர் அவரது கையில் இருந்து பதாகையை பறிக்க முயன்றனர். இதனால் கைகலப்பு ஏற்பட்டது. அப்போது பிடிபி கட்சியைச் சேர்ந்த புல்வாமா எம்எல்ஏ வகீத் பாரா, குர்ஷித்தை காப்பாற்ற முயன்றார்.

இதனிடையே, மக்கள் மாநாடு கட்சியின் சஜத் லோன் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏகள் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றினர். அந்தத் தீர்மானத்தில், "மத்திய அரசு, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019-ஐ இயற்றியதையும், அரசியலமைப்புக்கு விரோதமாக ஒருதலைபட்சமாக சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ ரத்துசெய்யப்பட்டதையும் இந்த அவை வன்மையாக கண்டிக்கிறது.

இந்த நடவடிக்கைகள் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தையும், மாநில அந்தஸ்தினையும் பறித்தது. இந்திய அரசியலமைப்பு ஜம்மு காஷ்மீருக்கும் அதன் மக்களுக்கும் வழங்கிய அடிப்படை உத்தரவாதம் மற்றும் பாதுகாப்பினை குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது. இந்த பேரவை, சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ பிரிவுகளை அதன் அசல் தன்மையுடன் எந்த விதமான மாற்றமுமின்றி உடனடியாக மீட்டெடுக்க வேண்டும். மேலும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019-ன் படி ஏற்படுத்தப்பட்ட மாறுதல்களை திரும்பப்பெறவும் கோருகிறது.

ஜம்மு காஷ்மீரின் தனித்துவமான அடையாளம், கலாச்சாரம், அரசியல் சுயாட்சியைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் அனைத்து சிறப்பு வசதிகள் மற்றும் உத்தரவாதங்களை மீட்டெடுப்பதன் மூலம், ஜம்மு காஷ்மீரின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக புனிதத்தை மதிக்குமாறு மத்திய அரசினை நாங்கள் வலியுறுத்துகிறோம்."என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in