தீவிரவாதிகளை கொல்லக் கூடாது: பரூக் அப்துல்லா கருத்து

தீவிரவாதிகளை கொல்லக் கூடாது: பரூக் அப்துல்லா கருத்து
Updated on
1 min read

ஸ்ரீநகர்: தீவிரவாதிகளை கொல்வதற்கு பதிலாக அவர்களை உயிருடன் பிடிக்க வேண்டும் என்று தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா கூறியிருப்பது அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாடு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா நேற்று கூறியதாவது: தீவிரவாதிகளை கொல்வதற்கு பதிலாக அவர்களை உயிருடன் பிடிக்க வேண்டும். இதன்மூலம் ஜம்மு காஷ்மீர் முழுவதும் சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர்களை கண்டுபிடிக்க முடியும்.

தாக்குதல்களை மேற்கொள்ளும் பரந்த நெட்வொர்க் தொடர்பான முக்கிய தகவல்களை பிடிபடும் தீவிரவாதிகள் அளிக்க வாய்ப்புள்ளது. பட்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து விசாரணை நடத்த வேண்டும். ஜம்மு காஷ்மீர் அரசின் ஸ்திரத்தன்மையை

போக்க முயற்சிப்பவர்களால் இந்த தாக்குதல் நடந்ததா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. தீவிரவாதிகள் உயிருடன் பிடிபட்டால் இந்த தாக்குதல்களுக்கு பின்னால் இருப்பவர்களை நாம் அறிய முடியும். ஒமர் அப்துல்லா அரசை சீர்குலைக்க ஏதேனும் ஏஜென்சி முயற்சி செய்கிறதா என நாம் அறிய முடியும்.

இவ்வாறு பரூக் அப்துல்லா கூறினார். பரூக் அப்துல்லாவின் இந்தக் கருத்து அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in