

பெங்களூரு: மசூதிக்குள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடுவது மத உணர்வுகளை புண்படுத்துவது ஆகாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கர்நாடகாவின் தக்ஷின கன்னடா மாவட்டத்தில் உள்ள மசூதி ஒன்றில் இரவு நேரத்தில் நுழைந்த இரண்டு நபர்கள் ’ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிட்டதாகவும், மதரீதியாக அச்சுறுத்தம் வகையில் பேசியதாகவும் காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மத உணர்வுகளை புண்படுத்துதல், அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் மசூதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனை வைத்து அதே பகுதியைச் சேர்ந்த கீர்த்தன் குமார், சச்சன் குமார் என்ற இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.நாகபிரசன்னா, “பிரிவு 295ஏ என்பது தீங்கிழைக்கும் நோக்கில் எந்தவொரு வகுப்பினரின் மத உணர்வுகளையும், மத நம்பிக்கைகளையும் வேண்டுமென்றே அவமதிப்பதற்காக பதியப்படுவது. ’ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடுவது எப்படி மத உணர்வுகளை புண்படுத்தும் என்று புரியவில்லை. அந்த பகுதியில் இந்துக்களும் முஸ்லிம்களும் நல்லிணக்கத்துடன் வாழ்வதாக புகார்தாரரே தெரிவித்திருக்கும் நிலையில் இந்த சம்பவம் மோதலை ஏற்படுத்தும் என்று கூறுவதில் உண்மை இருக்கமுடியாது” என்று தெரிவித்தார்.
மேலும், “295ஏ பிரிவின் கீழ் எந்தவொரு செயலும் குற்றமாக மாறாது என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது. அமைதியைக் கொண்டுவருவதிலோ அல்லது பொது ஒழுங்கை சீர்குலைப்பதிலோ எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத செயல்கள் 295A பிரிவின் கீழ் குற்றத்திற்கு வழிவகுக்காது. குற்றத்தின் மூலப்பொருளை கண்டறியாமல், மனுதாரர்களுக்கு எதிராக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அனுமதிப்பது துஷ்பிரயோகம் மற்றும் தவறான நீதிக்கு வழிவகுக்கும்” என்று நீதிபதி தெரிவித்தார்.