பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்

உ.பி.யில் 6 வருடமாக அரசு பள்ளிக்கு வராத ஆசிரியை: தவறாமல் ஊதியம் பெற்றவருக்கு உதவிய முதல்வரும் சஸ்பெண்ட்

Published on

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் மீரட்டில் ஒரு ஆசிரியை, கடந்த 6 வருடங்களாக அரசு பள்ளிக்கு வாராமல் இருந்துள்ளார். தனது ஊதியம் மட்டும் தவறாமல் பெற்றவருடன் அதற்கு உதவிய பள்ளி முதல்வரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உ.பி.யின் மீரட்டில் பரிட்ஷித்கர் எனும் பகுதியில் ஒரு நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. இதில், ஆசிரியையாக பணியமர்ந்த சுஜாதா யாதவ் என்பவர் பல ஆண்டுகளாகப் பள்ளிக்கு வராமல் இருந்துள்ளார். இதனால், அவரது வகுப்புகளுக்கு ஆசிரியர் இன்றி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வந்துள்ளனர். இதன் மீது உபி அரசின் மாவட்ட அரசு பள்ளிகளின் தலைமை அதிகாரியான ஆஷா சவுத்ரிக்கு புகார் கிடைத்துள்ளது.

இதன் மீது அவர் மூன்று கட்டமான விசாரணைக்குழு அமைத்து நடவடிக்கைகள் துவங்கி உள்ளார். இதில், ஆசிரியையான சுஜாதா யாதவ் கடந்த 2920 நாட்களுக்கு முன் அப்பள்ளியில் பணியில் அமர்ந்ததாகத் தெரிந்தது. இந்த 2920 நாட்களில் ஆசிரியை சுஜாதா, வெறும் 759 நாட்கள் மட்டுமே பள்ளிக்கு வந்துள்ளார் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான விடுப்புகள் எதுவுமே அவர் எடுக்கவில்லை.

மாறாக, அவர் பள்ளிக்கு வராத நாட்களிலும் ஆசிரியை சுஜாதாவிற்கான வருகை மட்டும் பதிவு செய்யப்பட்டு வந்துள்ளது. இதற்கு அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய அப்பள்ளியின் முதல்வர், உடந்தையாக இருப்பதும் தெரிந்துள்ளது. இதன் காரணமாக, அப்பள்ளியின் முதல்வருடன் சேர்த்து ஆசிரியையான சுஜாதா யாதவும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இருவர் மீது வழக்குகள் பதிவாகி நடவடிக்கை தொடர்கிறது.

உபியின் அரசு பள்ளிகளில் பலவற்றிலும் இதுபோன்ற தவறுகள் நடைபெற்று வந்துள்ளன. இதை தடுக்கவே உபியின் முதல்வரான யோகி ஆதித்யநாத், கைப்பேசிகளில் அன்றாடம் ‘லைவ் அட்டண்டன்ஸ்’ முறையை அமலாக்கி இருந்தார். இதன்பிறகு, அரசு பள்ளிகளில் நடைபெறும் தவறுகள் தடுக்க முடியாமல் இருப்பதாகக் கருதப்படுகிறது. இதற்குமுன், ஒரு ஆசிரியை ஒரே சமயத்தில் 12 பள்ளிகளில் பண்ணியாற்றி பல கோடி அரசு ஊதியம் பெற்று சிக்கியதும் நினைவுகூரத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in