திருப்பதி கலப்பட நெய் குற்றச்சாட்டு: சிபிஐ மேற்பார்வையில் சிறப்பு குழு விசாரணை நடத்த உத்தரவு

திருப்பதி கலப்பட நெய் குற்றச்சாட்டு: சிபிஐ மேற்பார்வையில் சிறப்பு குழு விசாரணை நடத்த உத்தரவு
Updated on
1 min read

திருப்பதி: ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி லட்டு பிரசாதநெய்யில் விலங்குகளின் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலப்படம் செய்யப்பட்டிருந்ததாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து முன்னாள் நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடக் கோரிஉச்ச நீதிமன்றத்தில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி உள்ளிட்டோர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த உச்ச நீதிமன்றம், கடவுளை அரசியலுக்கு இழுக்க கூடாது என கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து ஆந்திர அரசு அமைத்த சிறப்பு விசாரணை குழுவின் விசாரணை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதுகலப்பட நெய் குற்றச்சாட்டை விசாரிக்க சிபிஐ இயக்குநர் மேற்பார்வையில் 5 உறுப்பினர்களை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிபிஐ மற்றும் ஆந்திர காவல் துறையில் இருந்து தலா 2 அதிகாரிகளும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவரும் எஸ்ஐடியில் இடம்பெற வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

“இந்த விவகாரத்தில் இரு தரப்பினரின் பரஸ்பர புகார்களுக்குள் நாங்கள் செல்லவிரும்பவில்லை. மக்களின் உணர்வுகளை கருத்தில்கொண்டு சுதந்திரமானவிசாரணைக்கு உத்தரவிடுகிறோம்” என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in