தெலங்கானா என்கவுன்ட்டரில் 6 மாவோயிஸ்டுகள் உயிரிழப்பு; கமாண்டோக்கள் இருவர் காயம்

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கோதங்குடேம் மாவட்டத்தில் போலீஸாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பெண்கள் உட்பட 6 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர் என்று போலீஸார் தெரிவித்தனர். இந்தச் சண்டையில் தெலங்கானா காவல் துறையின் உயரடுக்கு நக்சல் எதிர்ப்பு படையான க்ரேஹோண்ட்ஸை சேர்ந்த இரண்டு கமாண்டோக்கள் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் பத்ராத்ரி கோதங்குடேம் மாவட்டத்தின் கரககுடேம் காவல் நிலையத்தின் எல்லை கீழ்வரும் வனப்பகுதியில் நடந்தது என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், "தெலங்கானாவில் இருந்து அருகில் உள்ள சத்தீஸ்கர் மாநிலத்துக்கு மாவோய்ஸ்டுகள் கடந்து செல்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் சிறப்பு போலீஸார் குவிக்கப்பட்டனர்” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “துப்பாக்கிச் சூடு நடந்த பகுதியில் இருந்து இரண்டு பெண்கள் உட்பட ஆறு மாவோயிஸ்டுகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்கள் அடையாளம் காணப்பட்டனர். முதல்கட்ட விசாரணையின்படி இறந்தவர்களில் மாவோயிஸ்டுகளின் மூத்த தலைவரும் ஒருவர் என்று தெரியவந்துள்ளது. இரண்டு ஏகே47, எஸ்எல்ஆர் துப்பாக்கிகள் உள்ளிட்ட பிற பொருள்கள் கைப்பற்றப்பட்டன. சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in