

ஹைதராபாத்: தெலங்கானாவில் ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள போலீஸ் கமாண்ட் கண்ட்ரோல் மையத்தில் நேற்று முதல்வர் ரேவந்த் ரெட்டி முன்னிலையில் 130 நக்சலைட்டுகள் ஆயுதங்களோடு சரண் அடைந்தனர்.
இதில் 125 பேர் சத்தீஸ்கர், 4 பேர் தெலங்கானா, ஒருவர் ஆந்திர மாநிலங்களை சேர்ந்தவர்கள். இவர்கள் தரப்பில் 124 ஆயுதங்கள், வெடி மருந்துகள் போன்றவை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது: நக்சலைட்டுகளுக்கு போலீஸார் கொடுத்த நம்பிக்கையே அவர்களை சரண் அடைய வைத்துள்ளது. இனி அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும். தெலங்கானா மண்ணில் நக்சலிசத்திற்கு இடம் இல்லை. இதுவரை 721 நக்சலைட்டுகள் சரண் அடைந்துள்ளனர். 250 ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சரண் அடைந்தவர்களுக்கு ஆரோக்கிய திட்ட அட்டை வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்களுக்கு அறிவித்த ரொக்கம் முழுவதுமாக வழங்கப்படும். மீதமுள்ளவர்கள் மீது மத்திய, மாநில அரசுகளின் கண்காணிப்பு இருந்து கொண்டே இருக்கும். ஆதலால் அவர்களும் சரண் அடைந்து விடுவது நல்லது. இவ்வாறு ரேவந்த் ரெட்டி பேசினார்.