பிஹார் மதரசாக்களில் பாகிஸ்தான் புத்தகங்கள்: குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் புகார்

பிஹார் மதரசாக்களில் பாகிஸ்தான் புத்தகங்கள்: குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் புகார்
Updated on
1 min read

புதுடெல்லி: தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்க் கனூங்கோ எக்ஸ் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

அரசு நிதியுதவியுடன் இயங்கும் பிஹார் மதரசாக்களில் மத அடிப்படைவாத பாடங்கள் கற்றுத்தரப்படுகின்றன. மேலும் யுனிசெப் இந்தியா உதவியுடன் பாடதிட்டங்கள் தயாரிக்கப்படுவதாக பிஹார் மதரசா வாரியம் தெரிவித்துள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு என்ற பெயரில் அரசுகளிடமிருந்து நன்கொடையாக பெற்ற பணத்தில் அடிப்படைவாத பாட திட்டங்களை உருவாக்குவது யுனிசெப்பின் பணி அல்ல.

கல்வி உரிமை சட்ட வரம்புக்குள் வராத நடவடிக்கைகளுக்கு இந்த நிதியைப் பயன்படுத்துவது இந்திய அரசியல் சாசனம் மற்றும் குழந்தைகள் உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாட்டு (யுஎன்சிஆர்சி) விதிகளை மீறும் செயலாகும். எனவே, இதுகுறித்து ஐ.நா. சபையின் இந்திய பிரிவு விசாரணை நடத்த வேண்டும்.

மேலும் பிஹார் மதரசாக்களில் இந்து மாணவர்கள் சேர்க்கப்படும் விவரங்களை பிஹார் அரசு வெளியிடாமல் நிறுத்தி வைத்துள்ளது. மதரசா என்பது எந்த வடிவத்திலும் குழந்தைகளின் அடிப்படைக் கல்விக்கான இடம் அல்ல. இந்து குழந்தைகளை மதரசாக்களில் சேர்க்கவே கூடாது. மதரசா வாரியம் கலைக்கப்பட வேண்டும்.

இதுதவிர, மதரசா பாடதிட்டத்தில் பாகிஸ்தானில் வெளியிடப்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் உள்ள உள்ளடக்கம் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in