மனைவிக்கு மாற்று நிலம் ஒதுக்கிய விவகாரம்: ஆளுநரிடம் ஆவணங்களை தாக்கல் செய்தார் சித்தராமையா

மனைவிக்கு மாற்று நிலம் ஒதுக்கிய விவகாரம்: ஆளுநரிடம் ஆவணங்களை தாக்கல் செய்தார் சித்தராமையா
Updated on
1 min read

பெங்களூரு: க‌ர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர மேம்பாட்டு கழகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தியது.

இதற்கு மாற்றாக, மைசூரு விஜயநகரில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன. கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததாக சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா, ‘‘மனைவிக்கு நிலம் ஒதுக்கிய விவகாரத்தில் முதல்வர் சித்தராமையா விதிமுறையை மீறியுள்ளார். இதில் சுமார் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்''என குற்றம் சாட்டினார். மேலும் அவருக்கு எதிராக மைசூரு நோக்கி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் சமூக ஆர்வலர் டி.ஜே.ஆப்ரஹாம் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் சித்த‌ராமையாவுக்கு எதிராக புகார் அளித்தார். அதன்பேரில் விளக்கம் அளிக்குமாறு சித்தராமையாவுக்கு ஆளுநர் நோட்டீஸ்அனுப்பினார்.

இதை தொடர்ந்து சித்தராமையா நேற்று ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டுக்கு விளக்கம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘‘மைசூரு நகர மேம்பாட்டு கழகம் மாற்று நிலம் ஒதுக்கிய விவகாரத்தில் எந்த விதிமுறை மீறலும் நடைபெறவில்லை. எனது மனைவிக்கு பாஜகவின் ஆட்சி காலத்தில் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையிலேயே நிலம் ஒதுக்கப்பட்டது.

மேலும், நிலம் ஒதுக்கியதில் எனது தலையீடு துளியளவும் இல்லை. இதனை எதிர்க்கட்சியினரும் உள்நோக்கம் கொண்டசிலரும் அரசியலாக்கி வருகின்றனர்''என தெரிவித்துள்ளார்.

நிலம் ஒதுக்கப்பட்டது தொடர்பான‌ ஆவணங்களையும் சித்தராமையா அனுப்பியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in