

இந்திய எல்லையில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட, அந்நாடு மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடியை வலியுறுத்தும் வகையில் சிவ சேனை கட்டுரை வெளியிட்டுள்ளது.
இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக சிவ சேனை தனது அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த ஒரு மாதத்தில் 25-க்கும் அதிகமான முறைகள், இந்திய நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. 13 முறை எல்லையோர கிராமங்களில் தாக்குதல் நடத்தப்பட்டு சேதங்களை ஏற்படுத்திவிட்டது.
கடந்த 2003- ஆம் ஆண்டுக்கு பின்னர் இம்ம்முறை அதிகமான தாக்குதல்கள் கடந்த இரு மாதங்களில் நடந்துள்ளன. ஆனால் இவை அனைத்தையும் வெடி சப்தம் கேட்டால், நாம் அதை கேட்டு காதை பொத்திக் கொண்டு செல்வது போல அமைதியாக இருக்கிறோம்.
இந்த தருணத்தில் அந்த நாடுடன் நாம் அமைதி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடுவது, முற்றிலும் பயனற்றது. எனவே, நேரத்தை கடக்காமல், பாகிஸ்தான் மீது தாக்குதல் மடத்த தயாராக வேண்டும். இந்த வகையில் புதிதாக அமைந்துள்ள அரசு, பாகிஸ்தான் விவகாரத்தில் தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டும். இது மத்திய அரசுக்கு நாங்கள் வைக்கும் கோரிக்கை" என்று அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.