துணை முதல்வர் பதவி கேட்டு 3 பேர் போர்க்கொடி: கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடும் நெருக்கடி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. முதல்வராக சித்தராமையாவையும் துணை முதல்வராக டி.கே.சிவகுமாரையும் காங்கிரஸ் மேலிடம் நியமித்தது. அப்போதே சில மூத்த தலைவர்கள் முதல்வர், துணை முதல்வர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில், ஒக்கலிகா பிரிவை சேர்ந்த டி.கே.சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவியை வழங்கியதைப் போல, லிங்காயத்து மற்றும் பட்டியலினத்தை சேர்ந்தவருக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்ற கோஷம் வலுத்துள்ளது.

இந்நிலையில் கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர், “2013ல் நான் காங்கிரஸ் மாநிலத் தலைவராக இருந்தபோது, நடந்ததேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. ஆனால் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது. 2018-ல் எனக்கு துணை முதல்வர் பதவி வழங்கினர். 2023-ல்எனக்கு துணை முதல்வர் கேட்டபோது, கட்சி மேலிடம் மறுத்தது.

ஒக்கலிகா பிரிவை சேர்ந்த டி.கே.சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால்காங்கிரஸ் வெற்றிக்கு காரணமாக இருந்த எஸ்.சி., எஸ்.டி., லிங்காயத்து, சிறுபான்மையின பிரிவினருக்கு எந்தப் பெரிய பொறுப்பும் வழங்கப்படவில்லை.

குறிப்பாக பட்டியலினத்தவரின் ஆதரவின் காரணமாகவே காங்கிரஸ் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ளது. எனவே அந்தப் பிரிவினருக்கு துணை முதல்வர் பதவி கட்டாயம் வழங்க வேண்டும்”என்றார்.

மூத்த அமைச்சர்கள் ஆசை: இதேபோல பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜண்ணா ஆகியோர், சாதிவாரியாக பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளனர். வீட்டுவசதித்துறை அமைச்சர் ஜமீர்அகமது கான், சிறுபான்மையினருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதவிர மூத்த அமைச்சர்கள் சிலரும் தங்களுக்கு துணை முதல்வர் பதவிக்கேட்டு, காங்கிரஸ் மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன‌.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in