ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: கேஜ்ரிவால் உதவியாளருக்கு 14 நாள் காவல்

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: கேஜ்ரிவால் உதவியாளருக்கு 14 நாள் காவல்
Updated on
1 min read

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை எம்.பி.யும், டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவருமான ஸ்வாதி மாலிவால் மே 13-ம் தேதி டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றார். அப்போது கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை கடுமையாக தாக்கியதாக ஸ்வாதி புகார் அளித்தார்.

இப்புகாரின் அடிப்படையில் பிபவ் குமாரை டெல்லி போலீஸார் கடந்த 18-ம் தேதி கைது செய்தனர். இந்நிலையில் 3 நாள் போலீஸ் காவலுக்குப் பிறகு அவரை டெல்லியின் டிஸ் ஹசாரி நீதிமன்றத்தில் போலீஸார் நேற்று ஆஜர்படுத்தினர். பிபவ் குமாரை மேலும் 14 நாட்கள் காவலில் விசாரிக்க டெல்லி போலீஸார் கோரிக்கை வைத்தனர். இதற்கு பிபவ் குமாரின் வழக்கறிஞர் ரஜத் பரத்வாஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போது பிபவ் குமார் கூறும்போது, “இந்த வழக்கு விசாரணையில் நான் தலையிட மாட்டேன். கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாதுகாக்குமாறு நானே கூறினேன். எனவே நான் ஏன் ஆதாரங்களை அழிக்க வேண்டும்? சாட்சிகள் அனைவரும் அரசு ஊழியர்கள், அவர்களை தூண்டவோ அல்லது அச்சுறுத்தவோ நான் எந்தப் பதவியிலும் இல்லை. மேலும் விசாரணைக்கு ஆஜராக நானே முன்வந்தேன். நான் வெளிநாடு தப்பிச் செல்ல மாட்டேன்” என்றார். இதையடுத்து பிபவ் குமாரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கைது நடவடிக்கைக்கு எதிராக பிபவ் குமார் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தது. கைது செய்யப்படுவதற்கு முன் ஸ்வாதிக்கு எதிராக போலீஸில் பிபவ் குமார் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in