Published : 23 May 2024 09:50 AM
Last Updated : 23 May 2024 09:50 AM

சொகுசு கார் விபத்து: புனே சிறுவனின் ஜாமீன் ரத்து

கோப்புப்படம்

புனே: கடந்த ஞாயிற்றுக்கிழமை புனேவில் அதிவேகமாக சொகுசு காரை இயக்கி இருவரது உயிரிழப்புக்கு காரணமான 17 வயது சிறுவனின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூன் 5-ம் தேதி வரையில் அவரை கண்காணிப்பு இல்லத்தில் வைக்க புதன்கிழமை அன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

புனேவின் கல்யாணி நகர் பகுதியில் ‘Porsche Taycan’ சொகுசு காரை இயக்கி விபத்தை ஏற்படுத்தினார் அந்த சிறுவன். விபத்தை தொடர்ந்து அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து, காவலர்கள் வசம் ஒப்படைத்தனர். இருந்தும் அடுத்த 15 மணி நேரங்களில் அவர் நிபந்தனை ஜாமீன் பெற்றார். அது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

அந்தச் சிறுவனுக்கு சமூக சேவை மேற்கொள்வது, போக்குவரத்து விழிப்புணர்வு கட்டுரை எழுதுதல் போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டதும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த சூழலில் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநில போக்குவரத்து துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சிறுவன் ஓட்டி வந்த சொகுசு கார் முறைப்படி பதிவு செய்யப்படவில்லை என்ற தகவலும் உறுதியானது. விபத்தை ஏற்படுத்திய சிறுவன், அவரது 25-வது வயது வரை வாகனம் ஓட்ட தடையும் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தந்தையை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை மூன்று நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சிறுவன் மற்றும் அவரது நண்பர்களுக்கு மதுபானம் வழங்கிய மதுபானக் கூடத்தின் பணியாளர்கள் இருவர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x