Published : 20 May 2024 04:14 AM
Last Updated : 20 May 2024 04:14 AM

8 மாநிலங்களில் 5-ம் கட்ட மக்களவை தேர்தல்: 49 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகளில் இன்று மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. ஹவுராவில் உள்ள தேர்தல் அலுவலகத்தில், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வழங்கப்பட்டன. படம்: பிடிஐ

புதுடெல்லி: நாடு முழுவதும் 6 மாநிலங்கள்,2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் 5-ம் கட்ட மக்களவை தேர்தல் இன்று நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, பியூஷ் கோயல் உட்பட மொத்தம்695 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒடிசாவின் 35 தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவும் நடக்கிறது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, 5-ம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. அதன்படி உத்தர பிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பிஹார், ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு காஷ்மீர், லடாக்கில் தலா 1 தொகுதிஎன மொத்தம் 49 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.

இத்தொகுதிகளில் 4.69 கோடி ஆண்கள், 4.26 கோடி பெண்கள், 5,409 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 8.95 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். 94,732 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் 9.47 லட்சம் வாக்குச்சாவடி அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விஐபி வேட்பாளர்கள்: இன்றைய தேர்தலில் மொத்தம் 695 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, லக்னோ தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அமேதி தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பிஹாரின் ஹாஜிபூர் தொகுதியில் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான், பிஹாரின் சரண் தொகுதியில் பாஜக மூத்த தலைவர் ராஜீவ் பிரதாப் ரூடி, ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் லாலுவின் மகன் ரோகிணி ஆச்சார்யா, மும்பை வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் தேசிய மாநாடு கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா ஆகியோர் இன்றைய தேர்தல் களத்தில் நிற்கும் முக்கிய வேட்பாளர்கள்.

ஒடிசாவில் மக்களவை தேர்தலோடு, 35 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. 5-ம் கட்ட தேர்தல் குறித்துதேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இதுவரை நடந்து முடிந்த 4 கட்ட தேர்தல்களில் 66.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 5-ம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க பொதுமக்கள் அதிகஎண்ணிக்கையில் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டுகிறோம். குறிப்பாக, நகரங்களை சேர்ந்த மக்கள்தவறாமல் வாக்களிக்க வேண்டும்.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணி முதல் மாலை6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். சில தொகுதிகளில் மட்டும்நேரம் மாறுபடும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x