ராஷ்மிகா மந்தனாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி

மோடி | ராஷ்மிகா
மோடி | ராஷ்மிகா
Updated on
1 min read

புதுடெல்லி: கடந்த பத்து ஆண்டு கால பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா கண்டுள்ள வளர்ச்சியை புகழ்ந்து அண்மையில் நடிகை ராஷ்மிகா மந்தனா பேசியிருந்தார். இந்நிலையில் ராஷ்மிகாவின் அந்தப் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி நெகிழ்ச்சியடைந்திருக்கிறார்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் ராஷ்மிகாவின் பதிவைப் பகிர்ந்து , “மக்களுடன் இணைந்திருப்பதும் அவர்களின் வாழ்வை முன்னேற்றுவதை விடவும் முற்றிலும் மன நிறைவான விஷயம் வேறொன்றுமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமாக அமைக்கப்பட்டுள்ள ‘அடல் சேது’ பாலம் குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் பேசியிருந்தார். அந்த வீடியோவில், “மும்பை - நவி மும்பை நகரங்களை இணைக்கும் வகையில் நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமாக அமைக்கப்பட்டுள்ளது ‘அடல் சேது’ பாலம். இதன் மூலம் இரண்டு மணி நேர பயணம் இருபது நிமிட பயணமாக மாறியுள்ளது. இது சாத்தியம் என நாம் யாராவது நினைத்துப் பார்த்திருப்போமா?

இதுபோன்ற உள்கட்டமைப்பு வசதிகளால்தான் எளிதில் நம்மால் பயணம் மேற்கொள்ள முடிகிறது. இது எனக்கு பெருமை அளிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாடு கண்டுள்ள வளர்ச்சியைப் பாருங்கள். இது அற்புதமானது. உள்கட்டமைப்பு சார்ந்த திட்டமிடல் அபாரமாக உள்ளது.

இளம் தலைமுறையை கொண்டுள்ள இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியா ஸ்மார்ட்டான நாடு. இளம் பாரதியார்கள் வாக்களிக்க வேண்டும். இப்போது அவர்களுக்கு அந்த பொறுப்பு உள்ளது. அவர்கள் சரியான திசையில் பயணிக்கிறார்கள் என மக்கள் நம்புகிறார்கள். இந்த வளர்ச்சி இதோடு நிற்கக்கூடாது. வளர்ச்சிக்காக வாக்களியுங்கள்” என ராஷ்மிகா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in