Published : 14 May 2024 08:36 PM
Last Updated : 14 May 2024 08:36 PM

சொந்த வீடு, கார் இல்லை - பிரதமர் மோடி சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி

பிரதமர் மோடி

புதுடெல்லி: தனது மொத்த சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி கோடி என்றும், சொந்தமாக வீடு, கார் இல்லை என்றும் பிரதமர் மோடி தனது பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் இந்த சொத்து மதிப்பு என்பது அவரது அசையும், அசையா சொத்துகள், முதலீடுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.

பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை உத்தரப் பிரதேசத்தின் வாராணசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் தனது வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இடம்பெற்றுள்ள தகவல்: மொத்த சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி. இதில் பெரும்பகுதி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் உள்ள ரூ.2.86 கோடி நிரந்தர வைப்புத்தொகை. கையிலிருக்கும் ரொக்கம் ரூ.52.920. காந்திநகர் மற்றும் வாரணாசியில் உள்ள இரண்டு வங்கிக் கணக்குகளில் உள்ள தொகை ரூ.80.304. தேசிய சேமிப்பு சான்றிதழில் ரூ.9.12 லட்சம் முதலீடு. ரூ.2.68 லட்சம் மதிப்புள்ள நான்கு தங்க மோதிரங்கள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-19 ஆண்டில் ரூ.11.14 லட்சமாக இருந்த பிரதமரின் வருமானம், 2022-23-ல் ரூ.23.56 லட்சமாக உயர்ந்துள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தல்களின்போது பிரதமர் தனது பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்த மொத்த வருமானமும் இந்த முறை அதிகரித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் தனது மொத்த சொத்து மதிப்பு ரூ.2.51 கோடி என்றும், 2014-ம் ஆண்டு ரூ.1.66 கோடி என்றும் குறிப்பிட்டிருந்தார். பிரதமர் மோடி தனக்கு சொந்தமாக எந்த நிலமும், பங்குகளும், மியூச்சுல் ஃபண்ட் முதலீடும் இல்லை என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பிரமாண பத்திரத்தில் பிரதமர் மோடி தனது மனைவி பெயர் யசோதாபாய் என்றும், மனைவி என்ன வேலை செய்கிறார் என்பதும், அவரது வருமானம் குறித்து எதுவும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார். தான் அரசு சம்பளம் மற்றும் வங்கியின் வட்டியில் இருந்து வருமானம் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

கல்வித் தகுதியைப் பொறுத்தவரையில், டெல்லி பல்கலைக்கழகத்தில் 1978-ம் ஆண்டு இளங்கலையும், 1983-ம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழகத்தில் முதுகலையும் பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளார். தன் மீது எந்தக் குற்றவியல் வழக்குகளும் நிலுவையில் இல்லை என்றும் பிரதமர் மோடி தனது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வேட்புமனு தாக்கல்: பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசி தொகுதியில் 7-வது மற்றும் இறுதி கட்டமாக ஜூன் 1-ல் வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. பிரதமர் மோடி களமிறங்கும் தொகுதியான வாராணசி மிகவும் கவனம் பெற்றிருக்கும் நிலையில், அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். பிரதமர் மோடியுடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக மாநிலத் தலைவர் சவுத்ரி பூபேந்திர சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.

பிரதமர் மோடி வாராணசியில் 3-வது முறையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x