Published : 14 May 2024 12:03 AM
Last Updated : 14 May 2024 12:03 AM

பாஜக மூத்த தலைவர் சுஷில் மோடி காலமானார்: பிரதமர் இரங்கல் 

சுஷில் குமார் மோடி

பாட்னா: பிஹார் முன்னாள் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி காலமானார். அவருக்கு வயது 72.

1952ஆம் ஆண்டு பிறந்த சுஷில் குமார் மோடி, மூன்று தசாப்தங்களாக அரசியல் களத்தில் இருந்தவர். கடந்த 2005 முதல் 2013 வரை மற்றும் 2017 முதல் 2020 வரை பிஹார் துணை முதல்வராகவும், நிதி அமைச்சராகவும் பதவி வகித்தார். இதுதவிர எம்எல்ஏ, எம்எல்சி, மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி ஆகவும் பதவி வகித்துள்ளார்.

இந்த சூழலில், கடந்த ஏப்ரல் மாதம் சுஷில் குமார் மோடிக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாக, தான் 2024 மக்களவை தேர்தலில் இருந்து விலகுவதாக சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுஷில் குமார் மோடி சிகிச்சை பலனின்றி இன்று (மே 13) உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகள் நாளை பாட்னாவின் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுஷில் குமார் மோடி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: “கட்சியில் எனது மதிப்புமிக்க சக தொண்டரும், பல தசாப்தங்களாக எனது நண்பராக இருந்தவருமான சுஷில் மோடியின் மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிஹாரில் பாஜகவின் எழுச்சி மற்றும் வெற்றியில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். எமர்ஜென்சியை கடுமையாக எதிர்த்து, மாணவர் அரசியலில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கினார். அவர் கடின உழைப்பாளியாகவும் மற்றும் அன்புக்குரிய எம்எல்ஏவாகவும் இருந்தார். அரசியல் தொடர்பான விஷயங்களை ஆழமாகப் புரிந்துகொண்டவர்.

ஒரு நிர்வாகியாகப் பாராட்டத்தக்க பல பணிகளைச் செய்தார். ஜிஎஸ்டியை நிறைவேற்றுவதில் அவர் ஆற்றிய பங்கு எப்போதும் நினைவுகூரப்படும். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!” இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x