Published : 10 May 2024 05:25 PM
Last Updated : 10 May 2024 05:25 PM

ஜூன் 2-ல் சரணடைய வேண்டும்: கேஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் விதித்த நிபந்தனைகள் என்ன?

கோப்புப்படம்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ள அதே வேளையில் பல்வேறு நிபந்தனைகளையும் விதித்துள்ளது. அதன்படி அவர் ஜூன் 2 ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

டெல்லி மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அரவிந்த் கேஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருந்தார். தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், அந்த மனுவினை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது இதனைத் தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கில் இன்று (வெள்ளிக்கிழமை) கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. ஜாமீனில் இருக்கும் போது கீழ் கண்ட நிபந்தனைகளை கேஜ்ரிவால் கடைபிடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  • டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வருவதற்கு முன்பாக ரூ.50,000க்கான தனிநபர் பத்திரம் வழங்க வேண்டும்.
  • ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜாமீனில் இருக்கும் காலங்களில் முதல்வர் அலுவலகத்துக்கோ, தலைமைச் செயலகத்துக்கோ செல்லக்கூடாது.
  • அவர் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் மேற்கொள்ளலாம்.
  • துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அனுமதி இல்லாமல் கேஜ்ரிவால் எந்த அலுவலக கோப்புகளிலும் கையெழுத்திடக்கூடாது.
  • அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லி மதுபான கொள்கை வழக்கு பற்றி பேசவோ அல்லது தன்மீதான குற்றச்சாட்டு பற்றி விவாதிக்கவோ கூடாது.
  • டெல்லி முதல்வர் இந்த வழக்கில் தொடர்புடைய எந்த சாட்சிகளுடனும் தொடர்பு கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபங்கர் தத்தா அடங்கிய அமர்வு, மக்களவைத் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்ற காரணத்தை கருத்தில் கொண்டு, அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

முன்னதாக கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்புத் தெரிவித்த அமலாக்கத்துறை இந்தியாவில் தேர்தல் வருடம் முழுவதும் நடைபெறுகின்ற காரணத்தால் கேஜ்ரிவாலுக்கு பிரச்சாரம் செய்ய ஜாமீன் வழங்குவது அரசியல்வாதிகளின் கைது நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வரும் என்று வாதிட்டது.

கேஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஜூன் 5ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார். அதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற அமர்வு, கேஜ்ரிவாலுக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. வரும் ஜூன் 2-ம் தேதி அவர் மீண்டும் சரணடைய வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x