Published : 09 May 2024 04:50 PM
Last Updated : 09 May 2024 04:50 PM

“கங்கனாவுக்கு இமாச்சல் பற்றி எதுவுமே தெரியவில்லை” - மண்டி காங். வேட்பாளர் விமர்சனம்

கங்கனா ரனாவத் | விக்ரமாதித்ய சிங்

புதுடெல்லி: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பிரச்சினைகள் பற்றி எந்தவொரு அறிவும் இல்லை என மண்டி மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங் விமர்சனம் செய்துள்ளார்.

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும், காங்கிரஸ் சார்பில் விக்ரமாதித்ய சிங்கும் போட்டியிடுகின்றனர். இதனிடையே பாஜக வெற்றி பெற்றால் மண்டியில் விமான நிலையம் அமைப்பதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார் கங்கனா . இது குறித்து விக்ரமாதித்ய சிங், அவரை விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பிரச்சினைகள் பற்றி எந்தவொரு அறிவும் இல்லை. வருங்காலத்தில் இங்கு விமான நிலையம் அமைப்பதற்கு நாங்களும் ஆதரவளிப்போம். அதைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்வோம். ஆனால், அப்பகுதி விளை நிலம் என்பதால், விமான நிலையம் அமைக்க தகுதியற்றது” என்றார்.

இரு தினங்களுக்கு முன்பு, பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத்துக்கு அரசியல் புரிதலோ தொலைநோக்கு பார்வையோ இல்லை என்றும், பிரதமர் மோடியின் பெயரைச் சொல்லித்தான் ஓட்டு கேட்கிறார் என்றும் விக்ரமாதித்ய சிங் கிண்டல் செய்தது குறிப்பிடத்தக்கது.

மண்டி தொகுதி: ஜூன் 1-ஆம் தேதி மண்டி மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. விக்ரமாதித்ய சிங், இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர், மறைந்த வீரபத்ர சிங்கின் மகன் ஆவார். அவர் வலுவான வேட்பாளராகக் கருதப்படுகிறார்.

மேலும், மண்டி மக்களவைத் தொகுதி தற்போது விக்ரமாதித்யாவின் தாயார் பிரதிபா தேவி சிங் வசம் உள்ளது. பாஜக எம்பி ராம் ஸ்வரூப் சர்மாவின் மறைவுக்குப் பிறகு 2021-இல் நடந்த இடைத்தேர்தலில் அவர் வெற்றி பெற்றார். மண்டி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x