தேவகவுடா மகன் ரேவண்ணாவுக்கு மே 14 வரை காவல் நீட்டிப்பு

தேவகவுடா மகன் ரேவண்ணாவுக்கு மே 14 வரை காவல் நீட்டிப்பு
Updated on
1 min read

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரது வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 3 பெண்கள் பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்தனர்.

இதேபோல தேவகவுடாவின் மூத்த‌ மகனும் மஜத எம்எல்ஏவுமான‌ ரேவண்ணா (66) மீதும் வீட்டு பணிப்பெண் பாலியல் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து கடந்த 11ம் தேதி ரேவண்ணாவையும், அவரதுஉதவியாளர் சதீஷ் பாவண்ணாவையும் சிறப்பு புலனாய்வு குழு போலீஸார் கைது செய்தனர். ஜெர்மனிக்கு தப்பியோடிய பிரஜ்வலை பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

ரேவண்ணாவின் போலீஸ்காவல் நேற்றுடன் நிறைவடைந்ததால் போலீஸார் அவரை பெங்களூரு சிறப்பு நீதிபதி முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், மேலும் 7 நாட்கள் காவலை நீட்டிக்குமாறு சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் கோரினர். இதனை ஏற்ற நீதிபதி ரேவண்ணாவின் போலீஸ் காவலை மே 14-ம் தேதிவரை நீட்டித்து உத்தவிட்டார்.

குமாரசாமி குற்றச்சாட்டு: கர்நாடக முன்னாள் முதல்வரும் மஜத மாநில தலைவருமான குமாரசாமி கூறியதாவது: ஆபாச வீடியோக்கள் அடங்கிய 25 ஆயிரம் பென்டிரைவ்களை விநியோகம் செய்ததன் பின்னணியில் டி.கே.சிவகுமார் இருக்கிறார். தேர்தல் நேரத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டதன் பின்னணியிலும் அவர் இருக்கிறார்.

சிறப்பு புலனாய்வுக் குழு டி.கே.சிவகுமாரின் விருப்பத்தின்படி செயல்படுகிறது. இந்த விசாரணையால் பாதிக்கப்பட்டவர்க‌ளுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை. இந்த வழக்கு விசாரணை முடிவடையும் வரை டி.கே.சிவகுமார் துணை முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும். இவ்வாறு குமாரசாமி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in