3 சுயேச்சை எம்எல்ஏ ஆதரவு வாபஸ் - ஹரியாணாவில் பாஜக பெரும்பான்மை இழந்தது

3 சுயேச்சை எம்எல்ஏக்கள்
3 சுயேச்சை எம்எல்ஏக்கள்
Updated on
1 min read

சண்டிகர்: ஹரியாணாவில் 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் பாஜக அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை நேற்று வாபஸ் பெற்றதால், பாஜக பெரும்பான்மை இழந்துள்ளது.

ஹரியாணாவில் ரந்தீர் கோலன், தரம்பால் கோந்தர், சோம்பீர் சிங் சங்வான் ஆகிய 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு வழங்கி வந்த ஆதரவை நேற்று வாபஸ் பெற்று, காங்கிரஸுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான பூபேந்திர் சிங்ஹுடா முன்னிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் இதை தெரிவித்தனர்.

2019 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 40 இடங்களிலும், மாநிலக் கட்சியான ஜனநாயக ஜனதா கட்சி 10 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. 90 தொகுதிகள் உள்ள ஹரியாணாவில், ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜகவும் ஜனநாயக ஜனதா கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்தன.

மனோகர்லால் கட்டார் முதல்வராகவும், துஷ்யந்த்சவுதாலா துணை முதல்வராகவும் பதவியேற்றனர். கடந்த மார்ச் மாதம் பாஜக கூட்டணியில் இருந்து ஜனநாயக ஜனதா கட்சி விலகுவதாக துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா அறிவித்தார். இதையடுத்து மனோகர்லால் கட்டார் மாற்றப்பட்டு, நயாப் சிங் சைனி முதல்வராக பதவியேற்றார்.

இந்தச் சூழலில் தற்போது 3 எம்எல்ஏக்கள் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்ற நிலையில் பாஜக பெரும்பான்மை இழந்ததாக தகவல் வெளியானதால் குழப்பம் ஏற்பட்டது. ஆனால், தங்களுக்கு முழு ஆதரவு இருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in