2-வது நாள் சோதனையில் குஜராத் கடல் பகுதியில் 173 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

2-வது நாள் சோதனையில் குஜராத் கடல் பகுதியில் 173 கிலோ போதைப்பொருள் பறிமுதல்
Updated on
1 min read

புதுடெல்லி: குஜராத் கடல் பகுதியில் 2-வது நாளாக மீன்பிடி படகில் கடத்தி வரப்பட்ட 173 கிலோ போதைப்பொருளை இந்திய கடலோர காவல் படை பறிமுதல் செய்துள்ளது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானிலிருந்து அரபிக் கடல் எல்லை வழியாக (குஜராத்) மீன் பிடி படகு மூலம் இந்தியாவுக்குள் போதைப் பொருளை கடத்தும் முயற்சி தொடர்கதையாக உள்ளது. இதைத் தடுக்க, இந்திய கடலோர காவல் படை (ஐசிஜி) போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி), குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு (ஏடிஎஸ்) ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இரு தினங்களுக்கு முன்பு பாகிஸ்தானிலிருந்து வந்த ஒரு படகைப் சிறை பிடித்தனர். அதில் இருந்த ரூ.600 கோடி மதிப்பிலான 87 கிலோ போதைப் பொருளை பறிமுதல் செய்ததாக இந்திய கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. மேலும் படகில் இருந்த 14 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில், குஜராத் கடல் பகுதியில் 2-வது நாளாக நேற்றும் ஐசிஜி, என்சிபி மற்றும் ஏடிஎஸ் அதிகாரிகள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும் வகையில் வந்த இந்திய மீன்பிடி படகை இடைமறித்து சோதனையிட்டனர். அதில் இருந்த 173 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். மேலும் அந்தப் படகில் இருந்த 2 பேரை கைது செய்தனர்.

கடந்த மாதம் ரூ.400 கோடி மதிப்பிலான போதைப்பொருளுடன் வந்த படகை இந்திய கடலோர காவல் படை பறிமுதல் செய்தது. அதில் இருந்த 6 பாகிஸ்தானியர்களை கைது செய்தது. இதுபோல கடந்த பிப்ரவரி மாதம் ரூ.3,300 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் 5 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in