Published : 20 Apr 2024 04:51 PM
Last Updated : 20 Apr 2024 04:51 PM

மணிப்பூரில் 47 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு கோரி காங்கிரஸ் மனு

இம்பால்: மணிப்பூரில் 47 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தக் கோரி மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் கோரிக்கை மனு அளித்துள்ளது.

மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர் கே.மேகசந்திரா, அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘உள் மணிப்பூர் தொகுதிக்குட்பட்ட 36 வாக்குச்சாவடி மையங்கள், வெளி மணிப்பூர் தொகுதிக்குட்பட்ட 11 வாக்குச் சாவடி மையங்கள் உட்பட மணிப்பூரில் 47 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், கிழக்கு இம்பாலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. அத்துடன், காங்கிரஸ் வேட்பாளர் பிமோல் அகோஜம் மற்றும் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களை அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய குழுவினர் மிரட்டியுள்ளனர். எனவே, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளோம். மேலும், 47 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தவும் கோரிக்கை விடுத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, மணிப்பூரில் உள் மணிப்பூர், வெளி மணிப்பூர் என 2 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் உள் மணிப்பூர் மக்களவை தொகுதியில் முழுமையாகவும், வெளி மணிப்பூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 15 சட்டப்பேரவை தொகுதிகளிலும் நேற்று (ஏப்.19) முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மணிப்பூர் பள்ளத்தாக்கில் வாக்குச்சாவடிகளுக்கு அருகே 2 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்தன.

கிழக்கு இம்பாலில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மதியம் 2 மணி அளவில் ஆயுதமேந்திய ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 65 வயது நபர் ஒருவர் காயம் அடைந்தார். பிறகு, இங்கு வாக்குச்சாவடி சேதப்படுத்தப்பட்டு, ஆவணங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதுபோல, விஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள தமன்போக்பி என்ற இடத்தில் நேற்று மற்றொரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இந்த 2 இடங்களும் உள் மணிப்பூர் தொகுதியில் அமைந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

மணிப்பூரில் தேர்தல் நடந்த 2 மக்களவைத் தொகுதிகளிலும் 68 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தற்போது காங்கிரஸ் கட்சி மறு வாக்குப்பதிவு நடத்தக் கோரியுள்ள 47 வாக்குச் சாவடி மையங்களில், அம்மாநில முதல்வர் பைரன் சிங் தொகுதிக்குட்பட்ட மூன்று மையங்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x