“நாட்டின் பன்முக தன்மை, உணர்வை மதிக்க தவறிய மோடி” - ராகுல் குற்றச்சாட்டு

“நாட்டின் பன்முக தன்மை, உணர்வை மதிக்க தவறிய மோடி” - ராகுல் குற்றச்சாட்டு
Updated on
1 min read

நாட்டின் பன்முக தன்மை, உணர்வுகளை பிரதமர் மதிக்க தவறிவிட்டார் என தாளூரில் நடைபெற்ற விவசாயிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசினார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ராகுல்காந்தி நேற்று மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் தாளூர் பகுதிக்கு வந்தார்.

அங்கு விவசாயிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நாம் மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். மத்தியில் ஆளக்கூடிய பாஜக அரசை எதிர்த்து நாம் போராடிக் கொண்டிருக்கிறோம், நம்முடைய பிரதமர் ஒரு நாடு, ஒரு தலைவர், ஒரு மொழி என்று தவறாக இந்த நாட்டை வழிநடத்த பார்க்கிறார். பல்வேறு கலாச்சாரங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு உணர்வுகளை கொண்ட மக்கள் வாழும் நாடு என்பதை மறந்துவிட்டு அவர்கள் செயல்படுகிறார்கள்.

தமிழ் மொழி, தமிழ் மக்கள் மீது எந்த மொழியும் ஆதிக்கம் செலுத்துவதை நாம் அனுமதிக்க மாட்டோம். நமது பாரத பிரதமர் நமது நாட்டின் பன்முக தன்மையை மதிக்க மறுக்கிறார். நமது நாடு, ஒரு மொழி, ஒரு நாடு என்பது அல்ல, பல்வேறு மொழி, பல்வேறு மக்களை உள்ளடக்கிய நாடு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாம் பல்வேறு மொழி, பல்வேறு இனம் ஆகியவற்றை கொண்டு வாழ்ந்து வருகிறோம். பல்வேறு ஒற்றுமைகளுடன் வாழ்வதுதான் நமது இந்திய நாடு.

ஒற்றுமையே நம் விருப்பம்: பாரத பிரதமர் இந்த பன்முக தன்மை, உணர்வுகளை எல்லாம் மதிக்க தவறிவிட்டார். நாம் நம்முடைய மக்களுக்கு, விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு, பல்வேறு இன மக்களுக்கான உரிமையை வழங்க விரும்புகிறோம். ஆனால் நமது பிரதமர் அதை விரும்பவில்லை.

பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை நாம் ஒற்றுமையை நிலை நாட்ட விரும்புகிறோம். ஆனால் அதை அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் குறிப்பிடுகின்ற ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு செயல் என்பது தவறு என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

இந்த நாட்டின் தலைவராக இருப்பவர் எல்லாவற்றையும் இணைப்பவராக இருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி இருக்கவில்லை. பாஜக அறிவித்துள்ள எந்த திட்டமும் மக்களுக்காக அறிவித்துள்ள திட்டம் இல்லை. அக்னிவீர் திட்டம் தவறான திட்டம். அதை மாற்றி அமைக்கப் போகிறோம். இவ்வாறு அவர் பேசினார். பின்னர்,கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க சாலை வழி மார்க்கமாக சென்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in