Published : 12 Apr 2024 04:02 PM
Last Updated : 12 Apr 2024 04:02 PM

“500 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை ராமர்...” - உ.பி. பிரச்சாரக் கூட்டத்தில் அமித் ஷா நெகிழ்ச்சி

முராதாபாத்: 500 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்தி ராமர் தனது பிறந்த நாளை பிரம்மாண்ட ஆலயத்தில் இருந்தபடி கொண்டாடப் போகிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் முராதாபாத் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, "2013-ல் அச்சம், கலவரம், பசு கடத்தல், குண்டர்களின் ஆட்சி ஆகியவற்றால் மேற்கு உத்தரப் பிரதேசம் பாதிக்கப்பட்டிருந்தது. நீங்கள் சமாஜ்வாதி கட்சியை அகற்றினீர்கள். பாஜக ஆட்சியில், 'ஒரே மாவட்டம் ஒரே தயாரிப்பு' திட்டம் தொடங்கப்பட்டு வளர்ச்சியில் மேற்கு உத்தரப் பிரதேசம் ஒரு படி முன்னேறியுள்ளது.

அதேபோல், மேற்கு உத்தரப் பிரதேசத்தின் கைரானாவில் இருந்து இந்துக்கள் இடம்பெயரும் நிலை இருந்தது. சமாஜ்வாதி கட்சி அகற்றப்பட்டதை அடுத்து, இப்போது இந்துக்களுக்குப் பதிலாக குண்டர்கள் இடம்பெயர்கின்றனர். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை முதல்வர் யோகி ஆதித்யநாத் வலுப்படுத்தி உள்ளார்.

500 ஆண்டுகளுக்குப் பிறகு, குழந்தை ராமர் தனது பிறந்தநாளை இந்த ராமநவமியில் கூடாரத்தில் இருந்து அல்லாமல், தனது பிரமாண்ட ஆலயத்தில் இருந்தவாறு கொண்டாட இருக்கிறார். சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் அயோத்தி ராமர் கோயிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி கோயிலை கட்டி 'பிரான பிரதிஷ்டை' செய்தார். ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற்ற விழாவுக்கான அழைப்பிதழ் அவர்களுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் தங்கள் வாக்கு வங்கி பயம் காரணமாக அதனை நிராகரித்தனர். கோயில் கட்டுவதை பல ஆண்டுகளாக எதிர்த்தவர்களுக்கு 'பிரான பிரதிஷ்டை' விழாவில் கலந்துகொள்ளும் தார்மீக தைரியம் இல்லை.

2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில், பிரதமர் மோடி பிரதமரானதற்கு மிகப் பெரிய காரணம் உத்தரப் பிரதேசம். உத்தரப் பிரதேசம் 2014-ல் 73 இடங்களையும், 2019-ல் 65 இடங்களையும் அளித்ததால் முழுப் பெரும்பான்மையுடன் நரேந்திர மோடி பிரதமர் ஆனார். அவரை மூன்றாவது முறையாக பிரதமராக்க வேண்டும். இம்முறை, 65, 73 போதாது. 80க்கு 80 இடங்கள் வேண்டும்.

ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேச மக்களுக்கும் காஷ்மீருக்கும் என்ன சம்பந்தம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேட்கிறார். மொராதாபாத்தின் ஒவ்வொரு குழந்தையும் காஷ்மீருக்காக உயிரைக் கொடுக்கத் தயாராக உள்ளது. 70 ஆண்டுகளாக, காங்கிரஸ் கட்சி, சட்டப்பிரிவு 370-ஐ ஒரு குழந்தையைப் போல தனது மடியில் வைத்து காத்து வந்தது.

நீங்கள் மோடியை இரண்டாவது முறையாக பிரதமராக்கினீர்கள். ஆகஸ்ட் 5, 2019 அன்று அவர் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கினார். இன்று நமது மூவர்ணக் கொடி அங்கு பெருமையுடன் பறக்கிறது. மோடியின் தலைமையில் காஷ்மீர் என்றென்றும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மோடி, முழு நாட்டையும் பெண்கள், ஏழைகள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் என நான்கு 'சாதிகளாக' பிரித்துள்ளார். இதன் அடிப்படையில், ஒட்டுமொத்த நாட்டிலும் உள்ள அனைவரின் வளர்ச்சிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று பேசினார். வரும் 17-ம் தேதி ராம நவமி நாடு முழுவதும் கொண்டாடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x