Published : 07 Mar 2024 09:02 PM
Last Updated : 07 Mar 2024 09:02 PM

சிலிண்டர் மானியம் ரூ.300 திட்டத்தை மேலும் ஓராண்டு நீட்டித்தது மத்திய அரசு!

புதுடெல்லி: பிரதமரின் உஜ்வாலா இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்ட பயனாளிகளுக்கு 2024-25-ம் நிதியாண்டில் சிலிண்டர்களுக்கான மானியத் தொகை ரூ.300-ஐ தொடர்ந்து வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.12,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பிரதமரின் உஜ்வாலா இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்ட (PMUY) பயனாளிகளுக்கு 2024-25-ம் நிதியாண்டில் ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு (14.2 கிலோ) மற்றும் (5 கிலோ) சிலிண்டருக்கு விகிதாசார விகிதத்தில் ரூ.300 மானியத்தை தொடர்ந்து அளிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மார்ச் 1-ம் தேதி நிலவரப்படி, 2024 –ம் ஆண்டில் 10.27 கோடிக்கும் அதிகமானோர் பிரதமரின் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்டப் பயனாளிகளாக உள்ளனர்.

இதன் மூலம் 2024-25-ம் நிதியாண்டில் மொத்த செலவு ரூ.12,000 கோடியாக இருக்கும். இந்த மானியம் தகுதியான பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு... - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் ஆகியவற்றின் கூடுதல் தவணையை 1.1.2024 முதல் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது அடிப்படை ஊதியம் / ஓய்வூதியத்தில் தற்போதுள்ள 46 சதவீதத்தை விட 4 சதவீதம் அதிகமாகும்.

அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டின் காரணமாக அரசுக்கு ஏற்படும் ஒட்டுமொத்தச் செலவு ஆண்டுக்கு 12,868.72 கோடி ரூபாயாக இருக்கும். இதன் மூலம் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். 7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்த ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படும் ஏஐ துறையின் வளர்ச்சிக்காக ரூ.10,371 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதற்கும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: அத்துடன், பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், 2024-25 பருவத்தில் கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 2024-25 பருவத்திற்கு குவிண்டாலுக்கு ரூ.5,335/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஒரு குவிண்டாலுக்கு ரூ. 285 அதிகமாகும். இது அகில இந்திய சராசரி உற்பத்திச் செலவில் 64.8 சதவீத வருவாயை உறுதி செய்யும்.

கடந்த 10 ஆண்டுகளில், கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை 2014-15 ஆம் ஆண்டில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ .2,400 லிருந்து 2024-25 ஆம் ஆண்டில் ரூ .5,335 / - ஆக உயர்த்தி, 122 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நடப்பு 2023-24 பருவத்தில், சுமார் 1.65 லட்சம் விவசாயிகள் பயனடையும் வகையில், 524.32 கோடி ரூபாய் மதிப்பிலான, 6.24 லட்சம் பேல் கச்சா சணல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x