Last Updated : 22 Feb, 2024 12:59 PM

16  

Published : 22 Feb 2024 12:59 PM
Last Updated : 22 Feb 2024 12:59 PM

பாஜக தேசிய கவுன்சிலில் கவனம் பெற்ற தமிழக அரசியல்: கட்சியினர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் | கோப்புப் படம்.

புதுடெல்லி: பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் தேர்தலுக்கு முன்பாகவே வெற்றிக்கான விவாதம் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கூட்டத்தில், தமிழக அரசியலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

இது தொடர்பாக, ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் பாஜக நிர்வாகிகள் வட்டாரம் பல்வேறு சுவாரஸ்யத் தகவல்களைப் பகிர்ந்துள்ளது. இதன்படி, மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் வெற்றி பெறுவது எப்படி? என விவாதிப்பது வழக்கம். ஆனால், டெல்லியின் பாரத மண்டபத்தில் கடந்த பிப்ரவரி 17, 18-ல் நடைபெற்ற 2 நாள் பாஜகவின் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் எத்தனை தொகுதிகளுடன் வெற்றி என விவாதிக்கப்பட்டுள்ளது. இதில், மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் பாஜக பெறவிருப்பது 350, 370, 400 எனப் பேசியுள்ளனர். ‘அப்கி பார் சார்சவு பார் (அடுத்தமுறை 400க்கும் அதிகம்)’ எனும் கோஷம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இவற்றின் பின்னணியில் எதிர்கட்சிகள் கூட்டணியும், அதில் முக்கிய கட்சியான காங்கிரஸும் வலுவாக இல்லை எனக் காரணம் காட்டப்பட்டது. மேற்கண்டவற்றை சுட்டிக்காட்டி பிரதமர் நரேந்திரமோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பேசி இருந்தனர்.

பிரச்சார வியூகங்கள்: அப்போது அவர்கள் பாஜகவின் தேர்தல் பிரச்சாரம் எப்படி இருக்க வேண்டும்? என்ற ஆலோசனைகளையும் வழங்கினர். இதில் மத்திய அரசின் திட்டங்களை முன்னிறுத்துதல், கடந்த பாஜக தலைமையிலான இரண்டு ஆட்சிக் காலங்களின் நிதி வளர்ச்சி உள்ளிட்டவை முன்னிறுத்த வலியுறுத்தப்பட்டது.

முக்கியமாக அவற்றின் பின்னணியில் பொதுமக்களுக்கு கிடைத்த பலனை எடுத்துரைக்கவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. உதாரணமாக, மத்திய அரசின் இலவசக் கழிவறை திட்டத்தை சாதாரணமாகக் கடந்து விடாமல் தன் முழுப்பலனை எடுத்துரைக்க அறிவுறுத்தப்பட்டது.

திறந்தவெளி கழிவறைகளுக்காக இருட்டில் செல்ல அஞ்சிய பெண்கள், இச்சூழலை சாதகமாக்கிய பாலியல் குற்றங்கள் குறைந்த நிலை போன்ற பலகோணப் பலன்களுடன் அரசு திட்டங்களை வரும் தேர்தலில் முன்னிறுத்த கோரப்பட்டது.

பாஜகவின் தேர்தல் அறிக்கைகளில் பல ஆண்டு வாக்குறுதியான ராமர் கோயிலும் பிரச்சாரங்களில் முக்கிய இடம் பெற உள்ளது. இத்துடன், அவ்வப்போது எதிர்கட்சிகளின் புகார்களுக்கு உடனடியாக சம்மந்தப்பட்டவர் பதிலளிப்பதுடன், அதற்கு ஆதரவுக் குரல்களும் பாஜகவில் எழவேண்டும் என பாஜக நிர்வாகிகளுக்கு கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம்: இதுபோன்ற விவாதங்களுக்கு இடையே எந்த மாநிலத்துக்கும் இல்லாத முக்கியத்துவம் தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ளது. இதில், தமிழக அரசியல், தமிழ் மொழி மற்றும் தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்களும் இடம் பெற்றிருந்தனர்.

பாஜக கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தன் உரையில், சமீபத்திய தனது தமிழ்நாட்டின் தனுஷ்கோடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட தென்மாநிலக் கோயில்கள் விஜயத்தை ராமர் கோயிலுடன் இணைத்து பேசினார். அதில் 800 வருடத்திற்கு முன் கம்பராமாயணம் எழுதிய கம்பர் அமர்ந்த அதே இடத்தில் தானும் அமர்ந்து அதை பாடக் கேட்டதாகவும் தெரிவித்தார். காசி தமிழ்ச் சங்கமங்கள், பனாரஸ் இந்து பல்கலைகழகத்தில் சுப்பரமணிய பாரதிக்கான இருக்கை அமைத்ததையும் பிரதமர் குறிப்பிட்டார்.

தமிழில் பேச பிரதமர் யோசனை: கூட்டத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிகழ்த்திய உரையின் போதும் பிரதமர் இடையில் பேசினார். அப்போது பிரதமர், “நீங்கள் தமிழ், தெலுங்கு மொழிகளையும் அறிவீர். ஏன் இங்கு தமிழில் உரையாற்றக் கூடாது?” எனக் கருத்து தெரிவித்தார். தொடர்ந்து அமைச்சர் நிர்மலாவும் சில நிமிடங்கள் தமிழில் பேசினார்.

பின்பற்றிய அமைச்சர் முருகன்: இதையே பின்பற்றி மத்திய தகவல் ஒலிபரப்பு, பால்வளம் துறைகளின் இணை அமைச்சரான எல்.முருகனும் தமிழில் உரை நிகழ்த்தினார். தேசிய கவுன்சில் கூட்டத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியுடன் இதர மொழிகளில் தமிழில் மட்டுமே உரைகள் நிகழ்த்தப்பட்டன.

பாரத ரத்னா: கடந்த ஆட்சிகளின் பாரதரத்னா விருதுகளை பட்டியலிட்டு பிரதமர் மோடி தலைமையில் அளிக்கப்பட்டவையும் ஒப்பிடப்பட்டன. இவற்றில் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு அறிவிக்கப்பட்ட பாரதரத்னாவும் முக்கியத்துவம் பெற்றது.

மோடி, யோகியை அடுத்து அண்ணாமலை: பாஜக கவுன்சிலின் இடையே பிரதமர் மோடி, உபி முதல்வர் யோகியை அடுத்து தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலைக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்தது. இவருடன் பேசவும், உடன் நின்று படம் எடுத்துக் கொள்ளவும் கவுன்சிலின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆர்வம் காட்டினர். இதற்கு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அவருக்கு இந்தி மொழி பேசத் தெரிந்ததும், இளம் தலைவராக இருப்பதும் காரணமானது.

தரையில் அமர்ந்த அண்ணாமலை.. இவர்களுக்காக நேரம் ஒதுக்கிய அண்ணாமலைக்கு கவுன்சில் கூட்டத்தில் கூட்டம் நிரம்பியதால் அமர இருக்கை கிடைக்கவில்லை. இதற்காகக் கவலைப்படாத அண்ணாமலை முதல் நபராக மேடையின் முன் சென்று தரையில் அமர்ந்தார். பலராலும் கவரப்பட்ட இந்த நடவடிக்கையால் மேலும் பலர் அண்ணாமலையைப் பின்பற்றித் தரையில் அமர்ந்தனர். இதேபோல், தனியாக நடைபெற்ற மாநில நிர்வாகிகள் கூட்டங்களிலும் தமிழ்நாடு பாஜக தலைவர் முக்கியத்துவம் பெற்றிருந்தார். இவ்வாறாக அனைத்தின் பின்னணியிலும் தமிழ்நாட்டின் அரசியலில் பாஜக காட்டும் ஆர்வம் இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x