

வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஷ்வால் | கோப்புப் படம்
புது டெல்லி: மேற்கு ஆசியாவில் மோதல் தொடரும் நிலையில், ஈரானில் இருந்து 1,200-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
புதுடெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “ஈரானில் மத்திய அரசு ஒருங்கிணைப்பு முயற்சிகளை நெருக்கமாக கையாண்டு, ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் வழியாக மீட்புப் பணிகள் மேற்கொண்டு வருகிறது. இதனால், ஈரானிலிருந்து இதுவரை சுமார் 1200 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 845 பேர் மாணவர்கள். இதில் 996 பேர் ஆர்மீனியாவுக்கும், 204 பேர் அஜர்பைஜானுக்கும் அனுப்பப்பட்டனர். மீட்கப்பட்டவர்களுக்கு அங்கிருந்து வெளியுறவு அமைச்சகம் உதவி செய்து வருகிறது.
இந்தியர்கள் பாதுகாப்பாக நம் நாட்டுக்குத் திரும்புவதை உறுதி செய்வதற்காக, ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகிய இரு நாடுகளிலும் உள்ள இந்தியத் தூதரகங்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் வெளியுறவு அமைச்சகம் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது.
மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் மோதல் குறித்து விவாதிப்பதற்காக, உலகத் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடி வருகிறார். பிரதமர் மோடி தற்போது உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், மார்ச் 28 அன்று, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது, மேற்கு ஆசியப் பகுதியில் தற்போது நடைபெற்று வரும் மோதல் குறித்து இருவரும் தங்கள் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர். அப்பகுதியில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களைப் பிரதமர் கடுமையாகக் கண்டித்தார். கடல்வழிப் போக்குவரத்துச் சுதந்திரம் குறித்தும், கப்பல் போக்குவரத்துப் பாதைகளைத் தடையின்றியும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பது குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்” என்றார்.
இதற்கிடையில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான மோதல் இரண்டாவது மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், அப்பகுதியில் உருவாகி வரும் பதற்றமான சூழலைக் கருதி, மேற்கு ஆசியப் பகுதிகளிலிருந்து 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் இந்தியா திரும்பியுள்ளனர் எனவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.