

புதுடெல்லி/பெங்களூரு: மத்திய அரசை கண்டித்து கர்நாடகமுதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் நேற்று போராட்டம் நடத்தினர்.
இதில் கர்நாடக துணை முதல்வர்டி.கே.சிவகுமார், அமைச்சர்கள், காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த போராட்டத்துக்கு பிறகு சித்தராமையா கூறியதாவது:
மத்திய அரசு, வரிப் பகிர்வில் கர்நாடகாவுக்கு அநீதி இழைத்துள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு கர்நாடகாவுக்கு ரூ.45,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் கர்நாடகாவுக்கு ரூ.14.87 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவுக்கு வழங்க வேண்டிய ரூ.1 லட்சம் கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். மேல் பத்ரா நீர்ப்பாசன திட்டத்துக்கு அறிவிக்கப்பட்ட ரூ.5,300 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
கர்நாடகாவில் 220 வட்டங்கள்வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால் ரூ.17 ஆயிரம் கோடியை உடனடியாக நிவாரணமாக தரவேண்டும். இவ்வாறு சித்தராமையா கூறினார்.
கர்நாடக அரசின் இந்த போராட்டத்துக்கு எதிராக பாஜக எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்பாகவும், பெங்களூருவில் உள்ள காந்தி சிலைக்கு முன்பாகவும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக அவர்கள் முழக்கம் எழுப்பினர்.