பச்சோந்தியே தோற்கும் அளவுக்கு நிறம் மாறும் நிதிஷ்: காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடும் தாக்கு

ஜெய்ராம் ரமேஷ்.
ஜெய்ராம் ரமேஷ்.
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் உத்தர் தினாஜ்பூரில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் நடத்தும் பாரத்ஜோடோ நியாய யாத்திரையில் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து அனைவரையும் அழைத்தார். 18 கட்சிகளும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாட்னாவுக்குச் சென்றோம். அதன் பிறகு, இண்டியாகூட்டணி உருவாகி பெங்களூரு, மும்பை என அடுத்தடுத்து ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினோம். நிதிஷ் குமார், அனைத்து கூட்டத்திலும் பங்கேற்றார்.

அவர் இண்டியா கூட்டணியில் இருந்து உறவை முறித்துக் கொள்வார் என்று எந்தவித அறிகுறியையும் தரவில்லை. அவர் கடைசி நேரத்தில் நம் கையை விட்டு வெளியேறியது மிகவும் வருத்தமளிக்கிறது. இது முழுக்க முழுக்க நம்பிக்கை துரோகம். அவர் செய்த துரோகத்துக்கு பிஹார் மக்கள் விரைவில் அவருக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்.

பச்சோந்தியே தோற்றுப்போகும் அளவுக்கு நிறம் மாறுகிறார் நிதிஷ் குமார். நான் வேறு என்ன சொல்ல முடியும்? குமார் வருவார், குமார் போவார் என்று நான் சொன்னேன். தற்போது பச்சோந்தியுடன் போட்டியிடும் அளவுக்கு நிறம் மாறுகிறார் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார்.

அவர் அடிக்கடி ராஜினாமா செய்து, தனது அரசியல் நிறத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறார். அவர் எங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார். அதை நாங்கள் மறக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் கூறியதாவது: இவர்கள் (நிதிஷ் குமார்) தினம் தினம் நிறம் மாறி வருகின்றனர். இதனால் பச்சோந்தி கூட புதிய நிறத்தைத் தேட வேண்டி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in