மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல்: 4 போலீஸ் கமாண்டோக்கள், 1 பிஎஸ்எஃப் வீரர் காயம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

இம்பால்: மணிப்பூரின் மோரே நகரில் நிகழ்ந்த புதிய வன்முறையில், தீவிரவாதிகள் மறைந்திருந்து நடத்திய தாக்குதலில் 4 கமாண்டோ போலீஸாரும், ஒரு எல்லை பாதுகாப்பு படை வீரரும் காயமடைந்துள்ளனர். தெளபால் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடந்த புதிய வன்முறைச் சம்பவத்தில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு அடுத்த நாள் இத்தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

மியான்மர் எல்லை அருகே இருக்கும் மோரே நகருக்கு பாதுகாப்பு படையினர் சென்ற போது அவர்களின் வாகனங்கள் மீது தீவிரவாதிகள் மறைந்திருந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது இந்தத் தாக்குதல் நடந்ததாக தகவல்கள் அறிந்தவர்கள் தெரிவித்தனர். காயம்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் அசாம் ரைபில்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, தெளபால் மாவட்டத்தில் உள்ள லிலாங் பகுதியில் அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய கும்பல் பொதுமக்கள் மீது நடத்திய தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். இதன்காரணமாக தௌபால், இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு காக்சிங் மற்றும் பிஷ்ணுபூர் மாவட்டங்களில் மாநில அரசு மீண்டும் ஊரடங்கை அமல் செய்துள்ளது.

“இந்தச் சம்பவத்தை அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. குற்றவாளிகளை விரைந்து பிடிக்க மணிப்பூர் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மக்கள் வன்முறையில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். குற்றவாளிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்பதை உறுதி அளிக்கிறேன். அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவும்” என அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் இதுவரை 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலர் வீடுகளை இழந்து அகதிகளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in