

ஆதார் தகவல்கள் கசிந்து வருவதாக புகார் எழுந்துள்ள நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 16 இலக்க மெய்நிகர் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆதார் பயன்பாட்டாளரின் பெயர், புகைப்படம், முகவரி மட்டுமே சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் பெற முடியும்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது:
கட்டாயத்தின் பெயரில், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் ஆதார் எண்களை பல்வேறு சேவை நிறுவனங்களுடன் ஏற்கெனவே பகிர்ந்து கொண்டுவிட்டனர். இந்த சூழ்நிலையில், ஆதார் தொடர்பாக அரசு கொண்டு வந்துள்ள புதிய வழிமுறை அர்த்தமற்ற ஒன்று. இது, குதிரைகள் தப்பித்த பின்னர், லாயத்தை பாதுகாப்பாக பூட்டுவது போன்றது. இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.