Published : 22 Dec 2023 01:22 PM
Last Updated : 22 Dec 2023 01:22 PM

இந்தியாவில் 3000-ஐ நெருங்கிய கரோனா பாதிப்பு: பிஹாரில் இருவருக்கு தொற்று உறுதி

கரோனா தொற்று

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் (வெள்ளிக்கிழமை) மட்டும் 640 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3000-த்தை நெருங்கியிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் கேரளாவில் ஒரு மரணம் பதிவாகியுள்ளது. மேலும் பிஹார் தலைநகர் பாட்னாவில் இரண்டு பேருக்கு கோவிட்-19 இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் நேற்று புதிதாக 358 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து நாடு முழுவதும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 2,669 ஆக அதிகரித்தது. இந்நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,669 இல் இருந்து 2,997 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஒருவர், பலியானதையடுத்து பலி எண்ணிக்கை 5,33,328 ஆக உயர்ந்துள்ளது. தற்போது இறப்பு விகிதம் 1.18 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 4,44,70,887 பேர் கரோனா தொற்றுலிருந்து மீண்டுள்ளனர், அதே நேரத்தில் நாட்டின் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் சதவீதம் 98.81 ஆக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 220.67 கோடி (220,67,79,081) கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் (வெள்ளிக்கிழமை) மட்டும் 640 பேருக்கு புதியதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிஹாரின் பாட்னாவில் இரண்டு பேருக்கு கோவிட்-19 இருப்பது உறுதியாகியுள்ளது. முதல் நோயாளி பாட்னாவில் உள்ள கார்ட்னிபாக்கில் வசிக்கும் 29 வயதுடையவர் என்பதும் இரண்டாவது நோயாளி பங்கா மாவட்டத்தில் வசிப்பவர் என்பதும் தெரியவந்துள்ளது. இரண்டு நபர்களும் வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் எங்கெங்கே பயணம் செய்திருக்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் அதிகரித்திருக்கின்றன எனக் கூறப்படுகிறது. ஆந்திரா, பிஹார், சத்தீஸ்கர், குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் உத்தரப்பிரதேசம் மற்றும் புதுச்சேரியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் காட்டுகின்றன. புதிய வகை கரோனா குறித்து உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன்,“நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், பீதி அடைய வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x