Published : 14 Dec 2023 04:41 PM
Last Updated : 14 Dec 2023 04:41 PM

ஜூலையில் ‘நோட்டம்’, சோதிக்கப்படாத ஷூக்கள்... - மக்களவை ‘அத்துமீறல்’ சதி திட்டம் நடந்தது எப்படி?

புதுடெல்லி: மக்களவையில் அத்துமீறல் நடவடிக்கையில் ஈடுபட்ட மனோரஞ்சன் கடந்த ஜூலை மாதம் பழைய நாடாளுமன்றத்துக்கு கட்டிடத்துக்கு வந்து பாதுகாப்பு சோதனையில் ஷூக்களைச் சோதனை செய்வதில்லை என்று அறிந்து சென்றதாகக் கூறப்படுகிறது.

மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் இருந்து புதன்கிழமை புகை குப்பிகளுடன் அவைக்குள் குதித்த 2 இளைஞர்கள், எம்.பி.க்களின் மேஜை மீது ஏறி, தாவி குதித்து ஓடியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. அதேநேரத்தில், இந்த இருவருக்கும் ஆதரவாக நாடாளுமன்ற கட்டிடத்துக்கு வெளியே 2 பேர் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். வண்ண புகையை வெளியேற்றும் குப்பிகளையும் வைத்திருந்தனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் உருவானது. இதுதொடர்பாக, டெல்லி சிறப்பு போலீஸார் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த சாகர் சர்மா மற்றும் பெங்களூரு விவேகானந்தா பல்கலைக்கழகத்தில் பயின்ற மைசூருவை சேர்ந்த பொறியியல் பட்டதாரி மனோ ரஞ்சன் ஆகியோரையும், வெளியே 2 பேர் கோஷமிட்ட ஹரியாணாவை சேர்ந்த நீலம் (42) என்ற பெண், அமோல் ஷிண்டே(25). ஆகிய நான்கு பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் பழைய நாடாளுமன்ற கட்டத்துக்கு வந்த பார்த்தபோது, நாடாளுமன்றத்தில் ஷூக்களைச் சோதனை செய்வதில்லை என்று தெரிந்து கொண்டது அவர்களின் நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கு உதவியாக இருந்துள்ளது. இதுகுறித்து, "கடந்த ஜூலை மாதம் எம்பியின் பெயரில் வழங்கப்பட்ட பாஸ் மூலமாக நாடாளுமன்றத்துக்கு உள்ளே நுழைந்து பார்த்த மனோரஞ்சன், பாதுகாப்புச் சோதனையில் ஷூக்களை சோதனை செய்வதில்லை என்று அறிந்து கொண்டார்" என அவர்களிடம் விசாரணை நடத்தி வரும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நால்வருடன் தலைமறைவாக இருந்து பின்னர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்ட லலித் ஜா, இந்தக் கூட்டத்துக்கான தலைவர் என நம்பப்படுகிறது. ஆசிரியர் தொழில் செய்து வரும் லலித் ஜா, கொல்கத்தாவில் வசித்து வருகிறார். பகத் சிங் விசிறிகள் பக்கத்தைப் பின்தொடர்ந்து வரும் இந்த ஐவரும், பகத் சிங்கைப் போலவே ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பியுள்ளனர். புதன்கிழமை சம்பவத்தன்று நாடாளுமன்ற வளாகத்துக்குள் இருந்த லலித் ஜா, மனோரஞ்சன், சாகர் சர்மா, நீலம் ஆசத், அமோல் ஷிண்டே ஆகியோர் தங்களின் திட்டத்துக்காக (மக்களவை அத்துமீறல்) 10-ம் தேதியே டெல்லி வந்துள்ளனர். குருகிராமில் உள்ள விஷால் சர்மா தங்க இடம் கொடுத்துள்ளார்.

இதில், லலித் ஜா, சாகர் சர்மா, மற்றும் மனோரஞ்சன் ஆகியோர் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு மைசூரில் சந்தித்து இந்தச் சம்பவத்துக்காக திட்டமிட்டுள்ளனர். பின்னர் அதில் நீலம் ஆசத் மற்றும் அமோல் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர். மனோரஞ்சனின் ஃபேஸ்புக் பதிவுகள், அவரை ஒரு கிளர்ச்சியாளரைப் போல காட்டினாலும், அவருக்கு எந்தவிதமான குற்றப் பின்னணியும் இல்லை என்று மைசூர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 9-ம் தேதி ராணுவ வேலைக்காக டெல்லி செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து கிளம்பிய அமோல், மகாராஷ்டிராவின் கல்யாணில் கலர் புகைக் குப்பியை ரூ.1,200-க்கு வாங்கியுள்ளார். இதுவரையில் இவர்களுக்கு தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு இருப்பதாக உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில், மக்களவை அத்துமீறல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x