Published : 03 Dec 2023 12:32 PM
Last Updated : 03 Dec 2023 12:32 PM

மத்தியப் பிரதேசத்தில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைக்கிறது பாஜக!

போபால்: மத்தியப் பிரதேசத்தில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையுடன் பாஜக முன்னிலை பெற்றிருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் தேசிய கட்சிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்தன. என்றாலும், முன்னிலை இடைவெளியை இரட்டிப்பாக்கி வெற்றியை உறுதி செய்து வருகிறது. | பார்க்க > 4 மாநில தேர்தல் முடிவுகள்

பெரும்பான்மைக்கு 112 இடங்கள் தேவை எனும் நிலையில், முற்பகல் 11.25 நிலவரப்படி பாஜக 155 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி 72 முன்னிலை பெற்று பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்த எண்ணிக்கைகள் கடந்த 2018 தேர்தல் முடிவுடன் ஒப்பிடுகையில், பாஜக 46 இடங்கள் அதிகமாகவும், காங்கிரஸ் 42 இடங்கள் இழந்தும் இருக்கின்றன. நட்சத்திர தொகுதிகளைப் பொறுத்தவரை, புத்னி தொகுதியில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் முன்னிலை வகித்து வருகிறார். ஆனால் ,கடந்த 1998-ம் ஆண்டு முதல் வெற்றியை ருசித்து வரும் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் கமல்நாத் சிந்த்வாரா தொகுதியில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக சிறிது நேரம் பின்னடைவைச் சந்தித்தார்.

முன்னதாக, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் மத்தியப் பிரதேசத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டிகள் நிலவும் என்று தெரிவித்திருந்தன. வெளியான 9 கருத்துக் கணிப்புகளில் 4 பாஜக வெற்றி பெறும் என்றும், 3 முடிவுகள் மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளில் பாஜக 139-க்கும் அதிகமான இடங்கள் கிடைக்கும் என்று தெரிவித்திருந்தன.

கடந்த 1993 மற்றும் 1998 தேர்தலில் காங்கிரஸின் திக்விஜய் சிங் தலைமையில் அடுத்தடுத்து வென்று ஆட்சி அமைத்ததற்கு பின்னர் காங்கிரஸிடமிருந்து மாநிலத்தை தட்டிப்பறித்த பாஜக 2003ம் ஆண்டிலிருந்து தனது வேரை மத்தியப் பிரதேசத்தில் ஆழமாக ஊன்றியுள்ளது. அதற்கு பின்னர் நடந்த நான்கு சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றில பாஜக வெற்றி பெற்றிருந்தது. என்றாலும் நீண்ட கால ஆட்சி, கால மாற்றம் ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு இந்த முறை பாஜகவிடமிருந்து ஆட்சியைத் தட்டிப்பறிக்கும் எண்ணத்துடனும், அடுத்தாண்டு வர இருக்கும் மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டும் பெரும் நம்பிக்கையுடன் இந்தத் தேர்தலை காங்கிரஸ் சந்தித்தது.

இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் வேட்பாளர், "நான் தேர்தல் போக்குகளை பார்க்கவில்லை. முற்பகல் 11 மணி வரை எந்தப் போக்குகளையும் பார்க்கத் தேவையில்லை. நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். மத்தியப் பிரதேச வாக்காளர்களை நம்புகிறேன்" என்றார். முன்னதாக, வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியான நிலையில் வியாழக்கிழமை கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் பலனத்தினை அவர்களுக்கு மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். உங்களின் கடின உழைப்பால் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் அதிக அளவில் வாக்களித்திருக்கிறார்கள். டிச.3ம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கும்போது மக்கள் காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆணையிடுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.

முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், "மக்களின் ஆசியுடனும், பிரதமர் நரேந்திர மோடியின் திறமையான தலைமையாலும் மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமையும் என நம்புகிறேன்" என்று தெரிவித்திருந்தார். அதேபோல் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மக்களின் நம்பிக்கை பாஜகவுடன் இருக்கும் என்று தான் நம்புவதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், "முடிவுகள் முழுமையாக வரும் வரை நாங்கள் காத்திருப்போம். தனிப் பெரும்பான்மையுடன் நாங்கள் ஆட்சி அமைப்போம். பிரதமர் மோடி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும், மக்கள் நலத் திட்டங்களுமே மக்களின் இத்தகைய ஆணைக்கு காரணம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x